வெளிநாட்டு நாணயங்களை கடத்தும் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஐவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு, வெளிநாட்டு நாணயங்களை கடத்தும் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இவர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, டுபாய் நோக்கி நேற்று பயணிக்க முயற்சித்த சந்தர்ப்பத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களின் பைகளில், மிக சூட்சமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 25 மில்லியன் ரூபா வெளிநாட்டு பணம் கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களில், 95000 அமெரிக்க டொலர், 18000 யூரோ, 37000 சவூதி ரியால் அடங்குவதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணத்தை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
புதியது பழையவை