சூரிய மண்டலத்தில் சுற்றிவரும் பாறைத் துகள்கள் ஒன்றிணைந்த ‘ஆஸ்டராய்டு’ எனப்படும் சிறியகோள் பூமிக்கு அருகில் வர உள்ளது.
இது பூமி மீது மோதும் அபூர்வ நிகழ்வு நடக்கலாம் என, விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
சூரிய மண்டலம் 460 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானபோது அதில் இருந்து வெளிப்பட்ட பாறைத் துகள்கள் ஒன்றாக இணைந்து ஆயிரக்கணக்கான சிறிய கோள்கள் உருவாகின இவை சூரிய மண்டலத்தை சுற்றி வருகின்றன.
கடந்த 1974ல் ஆஸ்திரேலிய விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட 7482 என்றழைக்கப்படும் சிறிய கோள் வரும் 18ம் தேதி பூமிக்கு மிக அருகில் வரும் என, அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான ‘நாசா’வின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சிறியகோள் 19.3 லட்சம் கி.மீ., தொலைவில் பூமியை ஒட்டி செல்லும். இது பூமிக்கும் நிலவுக்கும் உள்ள தொலைவைவிட 5.15 மடங்கு அதிகம். இந்த சிறியகோள் மணிக்கு 70,416 கி.மீ., வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது.
ஒரு கி.மீ., விட்டமும், 3,300 அடி உயரமும் உள்ள இந்த சிறியகோள் பிரமாண்டமாக உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இது பூமியின் மீது மோதுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு மிக பெரிய சிறுகோள்கள் பூமியை தாக்குவது ஆறு லட்சம் ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அபூர்வ சம்பவமாகவும் கூறப்படுகிறது.
சூரிய மண்டலத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய கோள்கள் பூமிக்கு அருகில் உள்ளன. இவற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவை பூமியை தாக்கக் கூடியவையாக இருக்கலாம் என்றும் நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த ஆண்டில் கடந்த 13 நாட்களில் மட்டும் மூன்று சிறியகோள்கள் பூமிக்கு அருகில் வந்துள்ளன. அதில் மிகப் பெரிய சிறியகோள், 49 ஆயிரம் மீட்டர் விட்டம் உடையதாக இருந்தது.