அம்பாறை - நிந்தவூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் பாரிய கடலரிப்பு - தடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை

அம்பாறை - நிந்தவூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் பாரிய கடலரிப்பிற்கு உள்ளாகி வருவதனால் கடலரிப்பை தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த கடற்கரை பகுதியில் உள்ள சுமார் 100 மீற்றருக்கு அதிகமான நிலப்பரப்பு கடலால் காவு கொள்ளப்பட்டுள்ளதுடன் 75 இற்கும் மேற்பட்ட காணிகள் மற்றும் தென்னந்தோட்டங்களும் கடலரிப்பால் அழிந்துள்ளன.

இத்தகைய தாக்கங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கடலில் ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றங்களினால் கடலரிப்பு அதிகமாக ஏற்படுவதுடன், கரையோர கடற்தொழிலில் ஈடுபடும் கடற்தொழிலாளர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த சில நாட்களாக ஏற்பட்ட கடலரிப்பினால் இப்பிரதேச கடற்கரை பிரதேசத்தில் தென்னமரங்கள் விழுந்துள்ளதுடன், கரையோரங்களில் நிர்மாணிக்கப்பட்டிருந்த கட்டடங்களின் ஒரு பகுதி முற்றாக இடிந்து கடலுக்குள் வீழ்ந்துள்ளதைக் காண முடிகின்றது.

மேலும் கடலரிப்பினால் அப்பகுதியில் போக்குவரத்து செய்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதுடன், கடந்த சுனாமி பேரலைத் தாக்கத்தில் பாதிக்கப்பட்ட இப்பிரதேச மக்கள் அச்சமடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.

இதேவேளை அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பின் காரணமாகப் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்கள் இழந்து வருவதோடு அங்குள்ள கடற்தொழிலாளர்களும் தொழில் நடவடிக்கைகளில் பெரிய இடர்களை எதிர்கொண்டு வருவதாகக் கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக அம்பாறை - நிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாகக் கடல் அரிப்பு அதிகரித்து வருகின்றமையினை தடுக்க நிரந்தரமாகக் கடல் அரிப்பைத் தடுக்க நடவடிக்கை முன்னெடுக்க பல்வேறு தரப்பினர் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


புதியது பழையவை