பள்ளிக் குழந்தைகளின் புத்தகப் பை சுமையை குறைக்க அதிரடி நடவடிக்கை

பள்ளிக் குழந்தைகளின் புத்தகப் பை சுமையை குறைக்கும் வகையில் வாரம் ஒரு நாள் புத்தகப் பை இல்லாத நாளாக கடைப்பிடிக்க மத்தியப் பிரதேசம் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கான வழிகாட்டுதலும் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் மத்தியப் பிரதேச அரசு இந்தத் திட்டத்தை தழுவியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1, 2ஆம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பை 1.6 முதல் 2.2 கிலோ கிராம் வரையிலான நிறையில் இருக்க வேண்டும்.

3 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பையின் நிறை 1.7 முதல் 2.5 கிலோ கிராம் வரை இருக்கலாம்.

6 மற்றும் 7ஆம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பை 2 கிலோ கிராம் முதல் 3 கிலோ கிராம் வரை இருக்கலாம். எட்டாம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பை 2.5 கிலோ கிராம் முதல் 4.5 கிலோ கிராம் வரை இருக்கலாம்.

9, 10 ஆம் வகுப்பு மாணவர்களின் பை 2.5 கிலோ கிராம் முதல் 4.5 கிலோ கிராம் வரை இருக்கலாம். இந்நிலையில், உயர்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பையின் எடையானது அந்தந்த பள்ளி நிர்வாகத்தினரால் மாணவர்கள் தேர்வு செய்யும் பாடப்பிரிவை பொருத்து அமையும்.

இதுதவிர பயிற்சி புத்தகங்கள், கையெழுத்து பயிற்சி புத்தங்கள் ஆகியனவற்றை 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் வகுப்பறையிலேயே வைத்துச் செல்லலாம்.

கணினி அறிவியல், நல்லொழுக்கப் பாடம், பொது அறிவியல், சுகாதாரம், உடற்பயிற்சி, விளையாட்டு மற்றும் கலை சார்ந்த பாடப் புத்தகங்களை 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிகளுக்கு கொண்டுவரத் தேவையில்லை என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை