கல்விப்பொதுத் தராதர உயர்தர பரீட்சை திகதியை பிற்போட்டால் 10ஆயிரம் பாடசாலைகள் மூடவேண்டிய நிலை வரும்

கல்விப்பொதுத் தராதர உயர்தர பரீட்சை திகதியை பிற்போட்டால் 10ஆயிரம் பாடசாலைகள் ஒரு மாதகாலத்துக்கு மூடிவேண்டிய நிலை ஏற்படுமென தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அத்துடன் சாதாரண தர பரீட்சையையும் உரிய காலத்தில் நடத்த முடியாமல்போகும் எனவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (3) ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹேஷா விதானகே உட்டப எதிர்க்கட்சி உறுப்பினர்கள், கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை பிற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


அவர்களின் கோரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சி உறுப்பினர் ஹேஷா விதானகே குறிப்பிடுகையில், பரீட்சை திணைக்களம் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு அதிக காலம் எடுப்பதால், அடுத்த தவணை உயர் தர பரீட்சை எழுதுவதற்கு எதிர்பார்த்திருக்கும் மாணவர்களுக்கு அதற்காக தயாராவதற்கு காலம் போதாது.

கடந்த வருட உயர்தர பரீட்சை பெறுபேறுகள் கடந்த மாதமே வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இந்த வருட உயர்தர பரீட்சை டிசம்பர் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

அப்படியாயின் இரண்டாவது தடவையாக பரீட்சை எழுதுவதற்கு எதிர்பார்த்திருக்கும் மாணவர்களுக்கு 98 நாட்களே இருக்கின்றது.

அதனால் உயர்தர பரீட்சையை 2 மாதங்களுக்காவது பிற்படுத்துமாறு அந்த மாணவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். எனவே இதுதாொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு பிற்படுத்தினால் 10 ஆயிரம் பாடசாலைகள் ஒரு மாதகாலத்துக்கு மூடவேண்டி ஏற்படுகின்றது. மாணவர்களுக்கு ஏற்கனவே பாடசாலை நாட்கள் குறைவாகவே இடம்பெற்றிருக்கின்றுது.

ஒரு மாதத்துக்கு பாடசாலைகளை மூடிவிடுவதால் மாணவர்களின் பாடத்தவணைகளை உரிய காலத்துக்கு முடித்துக்கொள்ள முடியாமல் போகின்றது. அதேநேரம் பாடசாலை நேர அட்டவணைக்கும் பரீட்சை நேர அட்டவணைக்கும் இடையில் முரண்பாடு ஏற்படுகின்றது.

அத்துடன் உயர்தர பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு பிற்போடுவதனால் அடுத்து இடம்பெற ஏற்பாடாகி இருக்கின்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை நடத்த முடியாமல் போகின்றது.

இதனால் சாதாரண தர பரீட்சையை நடத்த முடியாமல் போகின்றது. இவ்வாறு சென்றால் ஒரு நிலைமைக்கு கொண்டுவர முடியாமல் போகும். கொவிட் தொற்று காரணமாக அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டிருந்தன, அதனால் ஏற்பட்ட இந்த பிரச்சினையை தற்போதுதான் ஓரளவுக்கு சரி செய்து வருகின்றோம்.

அத்துடன் உயர்தர பரீட்சையை டிசம்பர் மாதத்தில் நடத்துவதால் குறிப்பிட்ட சில மாணவர்களுக்கே கஷ்டமான நிலை ஏற்படுகின்றது. முதல் தடவையாக பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

இரண்டாம் முறை பரீட்சை எழுதுவதற்கு எதிர்பார்த்திருக்கும் மாணவர்களுக்கு பரீட்சைக்கு தயாராவதற்கு 3 மாதம் வரை காலம் இருக்கின்றது. அவர்கள் பரீட்சைக்கான பாடநெறியை பூரணப்படுத்தி இருக்கின்றனர்.
என்றாலும் பரீட்சை விடயதானங்களை மாற்றி பரீட்சைக்கு முகம்கொடுப்பவர்களுக்கு சற்று சிரமம் ஏற்படலாம். அத்துடன் பரீட்சைகளை பிற்படுத்தும்போது அடுத்த வருட புதிய பாடசாலை தவணையை மார்ச் மாதம் 28ஆம் திகதி ஆரம்பிக்க முடியாமல் போகும்.

கடந்த வருடம் புதிய பாடசாலை தவணை ஏப்ரல் மாதத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. அதனால் இரண்டு தவணைகளையே எமக்கு பூரணப்படுத்த முடிந்தது. அடுத்த வருடமும் இந்த நிலையே ஏற்படும்.

என்றாலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய, உயர்தர பரீட்சை திகதியில் மாற்றத்தை செய்ய முடியுமா என பரீட்சை திணைக்களத்திடம் முன்வைக்கின்றேன்.

அத்துடன் திகதியில் மாற்றம் ஏற்படும்போது ஏனைய மாணவர்களுக்கும் அநீதி ஏற்படக்கூடாது என்பதையும் கலனத்தில் கொள்ளவேண்டி இருக்கின்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
புதியது பழையவை