அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனிக்கு உட்பட்ட தொழிலாளர்கள் இன்று (20) தொழிற்சாலைக்கு முன்பாக கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தீபாவளி முற்பணம் ரூபா 15,000 ஆயிரம் தருவதாக பெருந்தோட்ட கம்பனிகள் அறிவித்திருந்த போதிலும் அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனிக்கு உட்பட்ட அக்கரப்பத்தனை வேவர்லி, மோனிங்டன், போட்மோர், ஆடலி உள்ளிட்ட தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு 5000 ரூபாய் அல்லது பத்தாயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் முற்பணம் தருவதாக போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் இரண்டு மணி நேரம் போராட்டத்தில் ஈடுப்பட்டதோடு, மீண்டும் தொழிலுக்கு செல்லாமல் தொழிலாளர்கள் வீடுகளுக்கு திரும்பினர்.
தாம் முறையாக வேலை செய்ததாகவும், தற்போது எமக்கு வழங்கப்படும் முற்பணம் மாத சம்பளத்தில் அளவிடப்படும். அதேவேளை பெருந்தோட்ட கம்பனி 15 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியிருந்த போதிலும் இதனை தோட்ட நிர்வாகம் வழங்க முடியாது என கூறுவது எவ்விதத்தில் ஏற்றுக்கொள்ள முடியும்.
இதனாலேயே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டதாக போராட்டகாரர்கள் தெரிவித்தனர்.

