அம்பாறை - நாவிதன்வெளி பிரதேசசபை உறுப்பினர்கள் கறுப்புப் பட்டி அணிந்து போராட்டம் !

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளரின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக பிரதேசசபை உறுப்பினர்கள் இன்றைய தினம் கறுப்புப் பட்டி அணிந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

நாவிதன்வெளி பிரதேசசபையில் முன்னாள் தவிசாளர் த.கலையரசன் அவர்கள் பாராளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றமையைத் தொடர்ந்து ஏற்பட்ட தவிசாளர் வெற்றிடத்திற்கு அமரதாஸ ஆனந்த அவர்கள் 2020ம் ஆண்டு தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட சில காலங்களாக தவிசாளரின் செயற்பாடுகள் தன்னிச்சையாக இடம்பெறுவதாகவும், பிரதேசசபை உறுப்பினர்களின் முன்மொழிவுகள் நிறைவேற்றப்படாமை, மக்களுக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாமல் இருப்பது போன்ற பதினாறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரதேசசபையின் உறுப்பினர்கள் இன்றைய தினம் இவ்வார்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இன்றைய தினம் சபையின் 56வது பொதுச்சபை அமர்வு இடம்பெறுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் திடீரென கூட்டம் இரத்துச் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் சபை நடவடிக்கைகளுக்காக வருகை தந்த உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தவிசாளரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு கூட்டம் இடம்பெறாமைக்கும் சேர்த்து இன்றைய ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.

மேற்படி நாவிதன்வெளி பிரதேசசபையில் 13 உறுப்பினர்கள் இருக்கின்ற நிலையில் அதில் 11 உறுப்பினர்கள் இணைந்து இன்றைய ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை