மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காங்கேயனோடை பிரதேசத்தில் வீடு ஒன்றை உடைத்து பெறுமதியான பொருட்களை கைகுண்டை காட்டி கொள்ளை அடித்து வந்த இருவரை நேற்று (23) கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்துள்ளதுடன் கையடக்க தொலைபேசிகள், 50 ஆயிரம் ரூபாய் பணம், வாசனைத் திரவியங்கள் உட்பட வீட்டு பாவனைப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பிரதேசத்தில் தொடர்சியாக பல வீடுகளில் கை குண்டுகளை காட்டி கொள்ளையர்கள் கொள்ளையில் ஈடுபட்டுவந்த சம்பவங்கள் இடம்பெற்று வந்துள்ளன.
இதனை அடுத்து கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி சப் இன்ஸ்பெக்டர் ஏ.எஸ். றஹீம் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் இன்று 24 ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.