ஆயித்தியமலை-வடக்கு,கற்பானைக்குளம் கிராமத்தில் காட்டுயானையால் அச்சுறுத்தல்

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஆயித்தியமலை – வடக்கு, கற்பானைக்குளம் கிராமத்திற்குள் இன்று அதிகாலை புகுந்த காட்டுயானை அங்குள்ள கிராமவாசி ஒருவரின் வீட்டினை அழித்து துவம்சம் செய்துள்ளது.

குறித்த வீட்டில் இரண்டு பிள்ளைகளும் அவர்களது பாட்டியும், பாட்டனுடனும் வாழ்ந்துவந்த நிலையில் அதிகாலை வேளை வந்த காட்டுயானை இவர்கள் வசித்த வீட்டினை உடைத்து முற்றாக அழித்துள்ளது.

இதேவேளை யானை வருவதை கண்டு வீட்டில் இருந்தோர் அருகாமையில் உள்ள வீட்டுக்கு ஓடிச் சென்று தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.

யானை பாதுகாப்பு மின்சார வேலிகள் இருந்தும், அவ் வேலிகளைத் தாண்டி
இப்பிரதேசத்திலுள்ள கிராமங்களுக்குள் ஊடுருவி தமது பயிர்களையும் வீடுகளையும் தாக்கி, அழித்து வருவதாகவும் இப் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துவருகின்றனர்.

இதனை கவனத்தில் எடுத்து யானைகளை இங்கிருந்து வெளியேற்றி பெரும் காடுகளுக்குள் துரத்தி, தமக்கு பாதுகாப்பை வழங்குமாறும் இம் மக்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதியது பழையவை