திருகோணமலை புல்மோட்டை பகுதியில் காணி தகராறில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புல்மோட்டை பிரதேசத்தில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பகுதியில் இன்று (29) பிற்பகல் இந்த மோதல் நடந்துள்ளது.
புல்மோட்டை பம்ஹவுஸ் என்ற இடத்தில் விவசாய காணிக்குள் ஏற்பட்ட எல்லை பிரச்சினை காரணமாகவே இரு குழுக்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
குறித்த கைகலப்பில் புல்மோட்டை- 01 வட்டாரத்தைச் சேர்ந்த எஸ்.எம்.பதூர் (42வயது) மற்றும் புல்மோட்டை- நான்காம் வட்டாரத்தைச் சேர்ந்த எம்.எம்.சலீம் (42வயது) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் சடலம் புல்மோட்டை தள வைத்தியசாலைகள் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை படுகாயம் அடைந்த நான்கு பேர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.