அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றில் இருந்து மறைந்து போகும் ஒரு சைவத்தமிழ்க் கிராமம்




இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான #வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன.

அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நிலவிய நாகரிகம், அவர்களின் கலாச்சார பண்பாட்டு அம்சங்கள், பொருளாதார சமூக நிலவரங்கள், வெளிநாட்டு உறவுகள், உறவுநிலைகள், சமய நடவடிக்கைகள் போன்ற அம்சங்களை ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்வதாக அமைகின்றது.

அண்மையில் மட்டக்களப்பின் சமூக ஆர்வலரும், வரலாற்றுப் பட்டதாரியுமான திரு. வை. சத்தியமாறன் இணையத்தளம் ஒன்றில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள புராதன சிவன் ஆலயம் ஒன்றின் புகைப்படங்களைப் பிரசுரித்து அவ்வாலயம் தமிழர்களால் பாதுகாக்கப்படவேண்டும் என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

அந்தப்புகைப்படங்களில் இருந்து அது ஒரு புராதன ஆலயமாக இருக்கலாம் என்பதை கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத் தலைவர் எஸ். சிவகணேசனிடம் எடுத்துக் கூறிய போது அவ்விடத்தில் ஆய்வு செய்வதற்கான சகல ஏற்பாடுகளையும் அவர் மேற்கொண்டிருந்தார்.

அவரின் முயற்சிக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர், கலைப்பீடாதிபதி ஆகியோர் வழங்கிய ஆதரவும், உதவிகளும் ஆய்வுக் குழுவினரைப் பெரிதும் உற்சாகப்படுத்தின. இந்த ஆய்வுக்குழுவில் வரலாற்றுத் துறை தலைவர் எஸ். சிவகணேசன், மற்றும் விரிவுரையாளர் செல்வி கிறிஸ்ரினா, நிரோசினி, ஊடகவியலாளர் வை.சத்தியமாறன் ஆகியோருடன் கிழக்குப் பல்கலைக்கழக சமூகவியல்துறைத் தலைவர் கலாநிதி தில்லைநாதன் அவர்களும் இணைந்து கொண்டமை ஆலயம் அமைந்துள்ள வட்டாரத்தின் சமூக நிலைமைகளை அறிந்துகொள்ளப் பெரிதும் உதவியது.

இந்த ஆலயம் அம்பாறை மாவட்டத்தில் தீகவாபி, குடுவில் ஆகிய வட்டாரங்களை உள்ளடக்கிய ஆலங்குளம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இவ்வட்டாரத்தில் புழக்கத்தில் இருந்து வரும் பல இடப்பெயர்கள் பண்டுதொட்டு இங்கு தமிழர்கள் வாழ்ந்து வந்ததன் அடையாளங்களாகக் காணப்படுகின்றன. ஆயினும் தற்போது இங்கு ஒரு தமிழ்க் குடியிருப்பைத் தானும் காணமுடியவில்லை. இந்நிலையில் ஆலயச் சுற்றாடலில் பரந்த அளவில் வாழ்ந்து வரும் ஏனைய இன மக்கள் தமிழர்கள் இங்கு வாழவில்லை எனவும் அவர்கள் கரும்புத் தோட்டங்களில் வேலைசெய்வதற்காக இங்கு வந்த போது அவர்களின் வழிபாட்டுக்காகவே முன்பொரு காலத்தில் கட்டப்பட்ட ஆலயமே தற்போது அழிவடைந்த நிலையில் காணப்படுகிறது என அவர்கள் எம்மிடம் கூறிய புதுக்கதை எமக்கு அதிர்ச்சியான செய்தியாக இருந்தது.

ஏனெனில் இற்றைக்கு ஐந்து சகாப்தங்களுக்கு முன்னரே குடுவில் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுக்களை ஆய்வு செய்த பேராசிரியர் பரணவிதான அக்கல்வெட்டுக்களில் ஒன்றை ஆதாரமாகக் காட்டி இற்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்னரே இவ்விடத்தில் வாழ்ந்த “திஸ” என்ற தமிழ்ப் பெண்ணின் தலைமையில் தமிழ் வணிகர்கள் ஒன்று சேர்ந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதை உறுதிப்படுத்தி இருந்தார்.

பேராசிரியர் இந்திரபாலா இலங்கையில் 2300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் மொழியால் ஒரு இனக்குழுவாக வாழத் தொடங்கியதற்கு இந்தக்கல்வெட்டையும் முக்கிய ஆதாரமாகக் காட்டுகின்றார்.

அண்மையில் கிழக்கிலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் மேலாய்வில் எழுத்துப் பொறித்த மட்பாண்டச் சாசனங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தச்சாசனங்கள் தமிழ் மொழியில் தமிழ் வரிவடிவத்தில் எழுதப்பட்டுள்ளன.

அவற்றுள் நாகன், ணாகன், தம்பன், வண்ணக்கன் முதலான பெயர்கள் பொறித்த சாசனங்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இந்தச்சாசனங்கள் பற்றி பேராசிரியர் பத்மநாதன் அண்மையில் வெளியிடப்பட்ட நூல் ஒன்றில் விரிவாக ஆராய்ந்துள்ளார்.

இவ்வகையான மட்பாண்டச் சாசனங்கள் தமிழகத்தை அடுத்து கிழக்கிலங்கையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை கிழக்கிலங்கைத் தமிழரின் பூர்வீக வரலாற்றுக்கு புதுவெளிச்சமூட்டுவதாக உள்ளது. தொல்லியல் அறிஞர்கள் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு பெருங்கற்காலப் பண்பாடு என்ற புதிய நாகரிகத்தை அறிமுகப்படுத்தியவர்கள் நாக இன மக்கள் எனக் கூறுகின்றனர்.

இப்பண்பாட்டு மக்கள் கிழக்கிலங்கையில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அப்பண்பாட்டு மக்கள் பயன்படுத்திய மட்பாண்டங்களில் நாகன், ணாகன் முதலான பெயர்கள் இடம்பெற்றிருப்பது கிழக்கிலங்கையில் வாழ்ந்த பூர்வீக தமிழர்கள் நாக இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதை மேலும் உறுதி செய்வதாக உள்ளது.

இவ்வரலாற்றுப் பின்னணியிலேயே அம்பாறை ஆலங்குள ஆலயத்தின் தோற்றத்திற்கான காரணங்களை நோக்குவது பொருத்தமாகும். நீண்ட காலத்திற்கு முன்னரே ஆலங்கேணியில் வாழ்ந்த தமிழர்கள் இவ்வாலயத்தைக் கைவிட்டதன் காரணமாக தற்போது இவ்வாலயம் பெருமளவுக்கு அழிவடைந்து ஆலமரங்களுக்கு மத்தியில் வழிபட முடியாத ஆபத்தைத் தரும் வெறும் கட்டடமாகக் காணப்படுகின்றது.

ஆலயத்திற்கு உள்ளேயும், வெளியேயும் வளர்ந்துள்ள பெரிய ஆலமரங்களின் கிளைகளும், வேர்களும் ஆலயச் சுவர்கள் சிலவற்றிற்கு பாதுகாப்பு அரண்களாக உள்ளன. இவ்வாலயம் சிறிய விமானத்துடன் கூடிய கர்ப்பக்கிரகம், அந்தராளம், முன்மண்டபம், பலிபீடம், கொடிக்கம்பம் என்பவற்றைக் கொண்டு கட்டப்பட்டதை ஆய்வுக் குழுவினரால் அடையாளப்படுத்த முடிந்தது.

நீண்டகால வரலாற்றைக் கொண்டிருக்கும் இவ்வாலயம் பிற்காலத்தில் சீமெந்து கொண்டு மீள் உருவாக்கம் செய்யப்பட்டதை ஆலயத்தின் கட்டட வடிவங்களும் விமானத்தின் கலை வடிவங்களும் உறுதி செய்கின்றன. ஆயினும் இவ்வாலயம் மிகத் தொன்மையானதென்பதை ஆலயத்திற்கு உள்ளேயும், வெளியேயும் புதையுண்டு காணப்படும் பெருமளவு செங்கற்கள் உறுதிசெய்கின்றன. அதிலும் கற்பக்கிரகம், அந்தராளம் என்பவற்றின் உட்பாகங்கள் முழுக்க செங்கற்களால் கட்டப்பட்டவையாகக் காணப்படுகின்றன. செங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட அந்தராளத்தின் முன்பக்கச் சுவர் சீமெந்து கொண்டு பூசப்பட்ட நிலையில் செங்கற் சுவர் தெளிவாகக் காணப்படுகிறது. இந்த வேறுபாடுகளைக் கொண்டு செங்கற்களால் கட்டப்பட்ட கர்ப்பக்கிரகம், அந்தராளம் ஆலயத்தின் தொடக்ககால நிலையில் அதன் வெளிப்புறம் மட்டும் பிற்காலத்தில் சீமெந்து கொண்டு மீள் உருவாக்கம் செய்யப்பட்டதாகவும், முன் மண்டபம், பலிபீடம் முதலான கட்டடங்கள் ஆலயம் தோன்றிய கால அத்திபாரங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டதாக அல்லது ஆலயத்தை விரிவுபடுத்த பிற்காலத்தில் சீமெந்து கொண்டு கட்டப்பட்ட ஆலயப் பாகங்களாக இருக்கலாம் எனக் கூறமுடியும்.

இவ்வாலயத்தின் தோற்றகாலத்தை உறுதியாகக் கூறக்கூடிய கல்வெட்டுக்களோ விக்கிரகங்களோ இதுவரை கிடைக்கவில்லை. ஆலயத்தின் கர்ப்பக்கிரகம், அந்தராளம் என்பவற்றிற்கு உள் நுழைய முடியாதவாறு பெரிய ஆலமர வேர்கள் காணப்படுகின்றன. அதற்குள் கொடிய விசப்பாம்புகள் குடியிருப்பதற்குரிய தடயங்கள் பரவலாகக் காணப்படுகின்றன. இதனால் அச்சமின்றி அந்தக்கட்டடப் பகுதிகளுக்குச் சென்று ஆய்வை மேற்கொள்ள முடியவில்லை. இருப்பினும் வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு கர்ப்பக்கிரகத்தில் தெய்வ விக்கிரகங்களை வைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பீடம் முழுமையாக சிதைவடைந்துள்ளமை தெரிகின்றது. அவ்விடம் ஆழமாகத் தோண்டப்பட்டு பீடம் இருந்த இடம் பெரும் குழியாகக் காணப்படுகின்றது. பீடத்தின் பின்பக்கச் சுவரில் இருக்கும் திருவாசி புகைபடர்ந்த நிலையில் அதன் கலை வடிவங்கள் தெளிவற்றுக் காணப்படுகின்றன.

இருப்பினும் எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு இவ்வாலயம் மிகப் பழமையானது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. அவற்றுள் கர்பக்கிரகத்தின் மேற்பக்கச் சுவரில் குறுக்காகவைக்கப்பட்ட நான்கு கற்பலகைகள் மீது மேல் நோக்கி வட்டமாக இரு தளங்களில் கட்டப்பட்ட விமானத்தின் அமைப்பு, விமானம் அமைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட செங்கற்களின் அமைப்பும் அவற்றின் நீள அகலங்கள், கர்ப்பக்கிரகம், அந்தராளம் என்பவற்றின் வடிவமைப்பு, அவற்றின் நீள அகலங்கள், வாசற்பகுதிகளில் அமைக்கப்பட்ட அகலமான கற்தூண்கள் என்பன 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பொலநறுவை, திருமங்களாய் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட சோழர் கால ஆலயங்களை நினைவுபடுத்துவதாக உள்ளன.

எதிர்காலத்தில் தொல்லியல் திணைக்கள அனுமதியுடன் இவ்வாலயப் பகுதியில் விரிவான தொல்லியல் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டால் இவ்வாலயத்தின் தோற்றகாலம், அதன் கலைமரபுகள், வழிபடப்பட்ட தெய்வங்கள், காலரீதியான ஆலய வளர்ச்சி மாற்றம் ,ஆலயத்திற்கு சொந்தமாக இருந்த அசையும் அசையாத சொத்துக்கள் , ஆலயத்தைப் பராமரித்த மக்கள், வழிபாட்டு மரபுகள் தொடர்பான பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்பதில் ஐயமில்லை.
புதியது பழையவை