முள்ளிவாய்க்காலோடு முடங்கிப்போன ஈழநாதம்



நிலவன்-
இறுதிவரை போராடி முள்ளிவாய்க்காலோடு முடங்கிப்போன ஈழநாதம் மக்கள் நாளிதழ் 1990 ஆம் ஆண்டு மாசி மாதம் 19 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.


ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து நாளாந்தம் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் வெளிவந்து கொண்டிருந்த இப் பத்திரிகை இலங்கையில் நடைபெறும் பெரும்பாலான முக்கிய செய்திகளை வெளியிட்டு வந்ததுடன் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்டு வந்த துன்பங்களையும் உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டிய பத்திரிகைகளில் வடக்கின் முன்னணி நாளிதழாக இருந்தது.

1995 ஆம் ஆண்டு சிறிலங்கா படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த யுத்தத்தை அடுத்து யாழ்ப்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து சாவகச்சேரி கல்வயல் பகுதியில் இயங்கி வந்தது. பின்னர் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்த ஈழநாதம் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருந்தது.

1996 ஆம் ஆண்டு கிளிநொச்சியை நோக்கிய 'சத் ஜெய' இராணுவ நடவடிக்கையினால் ஈழநாதம் நிறுவனம் பழைய முறிகண்டிப்பகுதிக்கும் பின்னர் கரிப்பட்ட முறிப்புக்கும் பின்னர் புதுக்குடியிருப்புமாக மாறி மாறி இடம்பெயர்ந்தது.

வன்னியின் நெருக்கடியான காலகட்டமான 1996 - 2002 வரைக்கும் அதாவது பிரதான கண்டி வீதி திறக்கும் வரைக்கும் வன்னிக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வெளிவந்த ஒரே ஒரு மக்கள் ஊடகங்களில் ஈழநாதம் பத்திரிகையும் ஒன்றாகும்.

2002 ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர் கிளிநொச்சியில் இயங்கி வந்த இப் பத்திரிகை ஏனைய மாவட்டங்களிலும் வெளிவந்தது. அதாவது இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியான யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் போன்ற மாவட்டங்களிலும் வெளி வந்தது.

இவ்வாறாக 2006 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 11 ஆம் திகதிக்குப் பின்னர் வன்னிப் பகுதியில் மட்டுமே வெளி வந்த இப் பத்திரிகை தொடர்ந்து தமிழ் மக்களின் நெருக்கடி நிலை சார்ந்த சூழல்களை தாங்கி வெளி வந்திருந்தது. இறுதி யுத்தத்தின் கோரப்பிடியில் வன்னியில் பெரும்பாலான நிலங்கள் ஆக்கிரமிப்பட்ட பின்னர் கிளிநொச்சியை அண்டிய பிரதேசங்களையும் சிறிலங்கா படையினர் ஆக்கிரமித்திருந்த நிலையில் கிளிநொச்சி நகரையும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் எறிகணை மற்றும் பலத்த விமானத் தாக்குதல்களையும் மேற்கொண்டிருந்தனர்.

இந் நிலையில் கிளிநொச்சியில் இருந்து ஓக்டோபர் 2008 முற் பகுதியில் தருமபுரம் பகுதிக்கு இடம்பெயர்ந்து தற்காலிகமாக இயங்கி வந்தது. பின்னர் தருமபுரம் பகுதியில் இருந்து தை மாதம் உடையார்கட்டுப் பகுதியில் இயங்கி வந்தது. பின்னர் சுதந்திரபுரம் பகுதியிலும் பெப்ரவரி 10 ஆம் திகதி தேவிபுரம் பகுதியிலும் இயங்கியது.

தேவிபுரம் பகுதியில் ஒரே ஒரு நாள் மட்டுமே ஈழநாதம் பத்திரிகை வெளி வந்திருந்தது. தேவிபுரம் பகுதியில் இருந்து அச்சு இயந்திரங்கள் மற்றும் தளபாடங்கள் படையினரின் பலத்த எறிகணைத் தாக்குதலில் சேதமடைந்திருந்த நிலையில் மிகக் குறைந்த பணியாளர்களின் ஒத்துழைப்போடு இரணைப்பாலைப் பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றது.

ஆனால் அங்கு பத்திரிகை அச்சிடுவதற்கான எந்தவித சாத்தியங்களும் இல்லாத அளவுக்கு அச்சு இயந்திரங்கள் மோசமாக சேதமடைந்திருந்தது. இந்த நேரத்தில் ஈழநாதம் பத்திரிகை இயந்திரங்கள் முற்றாக சேதமடைந்திருந்த நிலையில் இயந்திர இயக்குனர் சுகந்தன் என்பரின் முயற்சியினால் பிளேட் மேக்கர் என்ற இயந்திரம் திருத்தம் செய்யப்பட்டது.

நிறுவனம் ஒன்றின் உதவியுடன் அச்சு இயந்திரங்கள் வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டு நகரும் பத்திரிகை நிறுவனமாக செயற்பட்டது. இலங்கையில் முதலாவது நகரும் பத்திரிகை நிறுவனம் என்று சொன்னாலே மிகையாகாது. எறிகணைகள் மிக அருகில் விழுகின்ற சமயம் அதனை பிறிதொரு இடத்திற்கு நகர்த்துவதற்கு 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டவர்கள் தான் அன்ரனி (அன்ரனிக் குமார்), தர்சன் ஆகியோர். இவர்கள் இருவரும் வாகனத்தினை பிறிதொரு இடங்களுக்கு நகர்த்துவதில் கை தேர்ந்தவர்கள்.

இவர்கள் இன்று உயிருடன் இல்லையென்பதற்காக மிகைப்படுத்தியதாக யாரும் எண்ண வேண்டாம். உண்மையில் இவர்களின் துணிச்சலான இப் பணியினை ஏனைய ஊடகவியளாலர்கள் கூட வியந்திருக்கின்றார்கள். பின்னர் இரணைப்பாலைப் பகுதியில் இடம்பெற்ற கிபிர் விமானத் தாக்குதலினை அடுத்து தொடர்ந்து 20 ஆம் திகதியே மீண்டும் இரணைப்பாலைக்கும் புது மாத்தளன் பகுதிக்கும் இடையில் உள்ள பிரதேசத்தில் இயங்கியது.

வாகனம் அச்சு இயந்திரங்களை சுமந்து நகருவதற்கு தயார் நிலையில் இருக்கின்றது. மின் பிறப்பாக்கி தனது வேலையை சரியாகச் செய்து கொண்டிருக்கிறது. காலை 5.30 மணி பத்திரிகைக்கான அனைத்து செய்திகளும் கணினியில் பக்கங்களாக ஆக்கப்பட்டு பிரதான கணினியினை ஒரு பணியாளர் உந்துருளியில் சுமந்து வருகிறார்.

இன்னொரு பணியாளர் ஏ-3 என்ற லேசர் பிரிண்டரினை சுமந்து வருகிறார். வைப்பதற்கு மேசைகள் இருக்கவில்லை. நிலத்தில் சாறம் ஒன்று விரிக்கப்படுகிறது. அதில் பிரதான கணினி பிரிண்டர் வைக்கப்பட்டு கணினிக்கும் பிரிண்டருக்கும் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. அவ் வீதியின் கரையால் மக்கள் சாரை சாரையாக செல்கிறார்கள். சிலர் வியந்து பார்க்கின்றார்கள். சிலர் இவங்களுக்கு தேவை இல்லாத வேலை என்று முணுமுணுக்கிறார்கள்.

அச்சு வாகனத்தின் அருகில் இடம்பெயர்ந்து வசித்து வந்த குடுபத்தினர் தேநீர் கொடுக்கின்றார்கள். அச்சிடுவதற்கான பிரிண்ட் எடுக்கப்பட்ட 15 நிமிடங்களில் அச்சு பதிப்பிற்காக தயார் நிலையில் அச்சு இயந்திரம் தயாராகின்றது. வாகனத்தில் சுகந்தன், தர்சன் இருவரும் தங்களது வேகத்தை அதிகரிக்கின்றார்கள். அன்றைய நாள் பத்திரிகையை தன்னால் முடிந்த அளவுக்கு இயந்திரம் அடித்துக் கொண்டிருக்கின்றது.

சில மீற்றர் தூரத்தில் தீடிரென எறிகணைகள் விழுகிறது. அதற்கு பின்னரான சில நிமிடங்களில் வானில் ஒரு எறிகணை வெடிக்கின்றது. அதிலிருந்து சிதறிய குண்டுகள் வீழ்ந்து வெடிக்கிறது. கத்தல் கதறல் என ஓடுவோர் அல்லோல கல்லோலம். இருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பிற்காக படுத்திருந்தார்கள். பலரின் முதுகுப்பக்கம் முள் கரண்டியால் கிண்டியது போன்று காணப்பட்டது. இது அன்றைய நாளில் நடந்த மிகச் சுருக்கமான காட்சியாகும்.

அடுத்த நாள் பத்திரிகை வாகனம் அதே பகுதியில் 400 மீற்றர் தாண்டி தரித்து நின்றது. வெறும் மணல் நிலத்தில் இருந்து கொண்டே கணனிகளை இயக்க வேண்டிய நிலையிலும் இப் பத்திரிகையின் வெளி வருவதற்கு உறுதுணையாக ஜெயராசா சுசிபரன் (சுகந்தன்), நல்லையா மகேஸ்வரன், மரி அருளப்பன் அன்ரனிகுமார் (அன்ரனி), சங்கரசிவம் சிவதர்சன் (தர்சன்), சசிமதன், மரியநாயகம் அன்ரன் பெனடிக் (அன்ரன்) உள்ளிட்ட மிகக் குறைந்தளவான பணியாளர்களின் முயற்சியில் தொடர்ந்து வெளி வந்திருந்தது.

சிறிலங்கா படையினர் தொடர்ந்து முன்னேறிவரும் நிலையில் அதே புது மாத்தளன் பகுதியில் சிலநாட்களும் பொக்கனைக்கும், வலைஞர் மடத்திற்கும் இடைப்பட்ட வெளிப் பிரதேசத்தில் சில நாட்களும் இயங்கி வந்தது.

இக் காலப்பகுதியில் தான் வற்றாப்பளை, முள்ளியவளையைச் சேர்ந்த சந்திரசேகரம் சசிமதன் எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இவர் முல்லைத்தீவு பத்திரிகை விநியோகஸ்தராக கடமை புரிந்து வந்தவர். இதே காலப் பகுதியில் ஈழநாதம் கணினி பக்க வடிவமைப்பாளர் மேரி டென்சி மற்றும் அவரது கணவரும் பொக்கணைப் பகுதியில் இடம்பெற்ற எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

பின்னர் முல்லைத்தீவு பத்திரிகை விநியோகஸ்தராக கடமைபுரிந்த மரியநாயகம் அன்ரன் பெனடிக் (அன்ரன்) என்பவர் உந்துருளியில் சென்று கொண்டிருக்கும் போது எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். சில நாட்களில் புதுக்குடியிருப்பு ஈழநாதம் விளம்பரப் பணிமனையின் முகாமையாளர் நல்லையா மகேஸ்வரன் எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

பொக்கணை, வலைஞர்மடம் வெளிப்பகுதியில் வீதிக் கரையில் இருந்த மரத்தின் கீழேயே விளம்பரப் பணிமனை அமைந்திருந்தது. விளம்பரப் பணிமனை என்றால் யாரும் முன்னைய இடங்களில் இருப்பது என்று யோசிக்க தேவையில்லை. பெயர் பலகையோடு ஒரு கதிரை இருக்கும். அதில் நல்லையா மகேஸ்வரன் இருப்பார். அவ்விடத்திலேயே பத்திரிகைக்கான விளம்பரங்களை வழங்க முடியும்.

அன்றைய நாள் மாலை அனைத்து விளம்பரங்களையும் சேகரித்து விட்டு சேகரித்த விளம்பரங்களை ஈழநாதம் அச்சு இயந்திரம் இருக்கும் பகுதிக்கு சென்று ஒப்படைத்து விட்டு தனது பணியினை நிறைவு செய்து விட்டு பச்சை புல் மோட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அவரது குடும்பத்தினர் யாழ்ப்பாணத்தில் வசித்திருந்தபடியால் தனது உறவினர் வீட்டிலேயே இவர் தங்குவது வழமை. அவர் போய் ஒரு மணித்தியாலத்தின் பின் அவரது உறவினர் ஒருவர் மகேஸ்வரன் கொல்லப்பட்ட செய்தியினை தெரிவித்திருக்கின்றார்.

உடனடியாக பச்சை புல் மோட்டைப் பகுதிக்கு சென்ற ஊடகப் பணியாளர்கள் அவரின் உடலை அடுத்த நாள் அடக்கம் செய்தார்கள். எந்தவித வசதிகளுமின்றி கையிருப்பில் இருக்கின்ற அச்சுப் பொருட்களை வைத்து நான்கு பக்கங்களில் நாளாந்தம் இப் பத்திரிகை வெளிவந்தது.

இடம்பெயர்வுகள், எறிகணைத் தாக்குதல்கள், விமானத் தாக்குதல்கள் என குடும்பம், குடும்பமாக இடம்பெயர்வின் சுமைகளை சுமந்த மக்களோடு ஈழநாதப் பணியாளர்கள் பலர் பணியாற்ற முடியவில்லை. இந் நேரத்தில் கணினியில் பக்க வடிவமைப்புக்களை செய்து அச்சு இயந்திரத்தில் பத்திரிகையினை அடித்து தானே அதை விற்பனை செய்து கொண்டிருக்கும் நேரத்தில் தான் சங்கரசிவம் சிவதர்சன் (தர்சன்) என்பவர் புதுமாத்தளன் சந்தியில் படையினரின் துப்பாக்கி ரவையினால் துடைப்பகுதியில் காயமடைந்திருந்தார்.

பின்னர் இவர் குணமடைந்து ஒரு சில வாரத்தில் மீண்டும் பணிக்கு திரும்பிவிட்டார். 2009 ஏப்பிரல் மாதத்தில் இரட்டை வாய்க்கால் பகுதியில் இயங்கிய ஈழநாதம் பத்திரிகை நிறுவனம் தொடரும் எறிகணைத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள், படு காயமடைந்தவர்கள் போன்றவர்கள் விபரங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தது.

2009 ஏப்பிரல் 20 ஆம் திகதி புதுமாத்தளன், பொக்கணைப் பகுதி படையினரின் தாக்குதலில் 1500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர். இத் தாக்குதலில் படு காயமடைந்தவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈழநாதம் ஊடகப் பணியாளர்களும் ஏனைய ஊடகங்களின் பணியாளர்களும் முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் உதவி புரிந்தும் வந்துள்ளனர்.

2009 ஏப்ரல் 25 அன்று வலைஞர்மடம் பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் சுரேன் கார்த்திகேசு என்பவர் படுகாயமடைந்ததுடன் ஜெயராசா சுசிபரன் என்றழைக்கப்படும் சுகந்தன் என்பவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார். இதன் பின்னர் முள்ளிவாய்க்கால் பகுதியில் இயங்கி வந்த ஈழநாதம் தனது செயற்பாட்டினை தளரவிடாது தொடர்ந்தும் வெளிவந்து கொண்டிருந்தது.

மிகக் குறைந்த வளத்துடனும் குறைந்த பணியாளர்களுடனும் இயங்கிய இப் பத்திரிகை மே மாதம் 12 ஆம் திகதி வரைக்கும் தனது பணியினை செய்து கொண்டிருந்தது. மே மாதம் 12 அன்று இரவு எறிகணைத் தாக்குதல்களில் கணினிகள் யாவும் முற்றாக சேதமடைந்ததோடு தனது பணியினை முன்னெடுக்க முடியாத நிலையில் நிறுத்திக் கொண்டுவிட்டது.

அந்நாள் வரைக்கும் தங்களது பணியினை செய்து கொண்டிருந்த ஊடகப் பணியாளர்களான அன்ரனி, தர்சன் என்பவர்கள் மே மாதம் 14 ஆம் திகதி படையினரின் தாக்குதல்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். இறுதி யுத்த காலப்பகுதியில் தங்களது குடும்பங்களின் சுமைகளையும் தாங்கி ஊடகப் பணியையும் செய்து தங்களது உயிரை இழந்த ஊடகப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு ஊடகவியளாலர்கள் அனைவரும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”


புதியது பழையவை