பெண் ஊடகவியலாளர் மீது பாலியல் சீண்டல்!



இலங்கை அரச ஊடகம் ஒன்றின் செய்தி மற்றும் நடப்பு விவகாரப் பிரிவில் பணிபுரிந்த இஷாரா தேவேந்திர, அங்குள்ள வயதான அதிகாரிகளால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியமை தொடர்பில் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் தலைவர் சுதர்சன குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் இஷாரா தேவேந்திர, மூத்த அதிகாரி ஒருவரிடமிருந்து தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டதாக தெரிவித்து அந்த ஊடகத்தில் இருந்து விலகுவதாகவும் அறிவித்திருந்தார்.



தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் முறைபாடு குறித்து ஆதாரங்கள் மற்றும் ஒலி மற்றும் காணொளி(audio, video) பதிவுகளுடன் அதிகாரிகளிடம் தெரிவித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் தன் சுயமரியாதையை காக்கவே பணியை விட்டு விலக முடிவு செய்ததாக கூறினார்.

மேலும் அங்கு பணிபுரியும் பெண்கள் தொடர்ந்து இதுபோன்ற துன்புறுத்தல்களை சந்திக்கும் சூழல் உள்ளதாக தெரிவித்த இஷாரா தேவேந்திர, அங்குள்ள முதியவர்கள் சிலர் பாலியல் இலஞ்சம் கோரி அழுத்தம் கொடுத்ததாக பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் , ஒரு அறிக்கையை வெளியிட்ட ஊடக ஊழியர்களின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, பாதிக்கப்பட்ட பெண்ணின் துணிச்சலையும், “காட்டுமிராண்டித்தனமான செயலை” அச்சமின்றி அம்பலப்படுத்த இஷாரா தேவேந்திர, எடுத்த நடவடிக்கைகளையும் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை