வீடு புகுந்து தாக்குதல் - காவல்துறை துப்பாக்கி பிரயோகம்!



புத்தூர் கலைஒளி கிராமத்தில் இளைஞர்கள் இருவரின் வீடுகளுக்குள் புகுந்த 50 இற்கும் மேற்பட்டோர் அவர்களைத் தாக்கியதுடன் பெறுமதியான பொருட்களையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.

பெண்களின் ஒளிப்படங்களை கணினியில் கிராபிக் செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர் என சந்தேகித்த இளைஞர்கள் இருவரின் வீடுகள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது  காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியே நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் அச்சுவேலி காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் இளைஞர்கள் இருவரும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை அதே கிராமத்தைச் சேர்ந்த பெண்களின் படங்களை கணினியில் கிராபிக் செய்து அசிங்கமாக சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.


அவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் இளைஞர்கள் இருவர் மீது சந்தேகம் கொண்டு நேற்றிரவு 11.30 அளவில் அவர்களின் வீடுகளுக்குள் புகுந்த 50 இற்கும் மேற்பட்டோர் அவர்களை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

அத்துடன், வீட்டுக்குள் இருந்த பெறுமதியான பொருட்கள் மற்றும் வீட்டு வளாகத்திலிருந்த வாகனங்களும் அடித்து சேதப்படுத்தப்பட்டன.

காயமடைந்த இளைஞர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதை அங்குள்ளவர்கள் தடுத்துள்ளனர், பின்னர் வருகை தந்த காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி நிலமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சம்பவத்தின் போது காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர்  வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த இளைஞர்கள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் அச்சுவேலி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
புதியது பழையவை