மட்டக்களப்பில் நச்சுத்தன்மை கொண்ட மீனை உட்கொண்ட மற்றுமொருவர் உயிரிழப்பு!



மட்டக்களப்பு, மாங்காட்டில் நச்சுத்தன்மை கொண்ட மீனை உண்டு ஒருவர் உயிரிழந்ததுடன் 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 54 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மாங்காடு கட்டுப் பிள்ளையார் வீதியைச் சேர்ந்த 54 வயதுடைய தில்லையம்பலம் சூசைமலர் என்பவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் உரிமையாளர் கடந்த 08 ஆம் திகதி மதிய உணவிற்காக அந்த பகுதியிலுள்ள கடற்கரையில் மீன் வாங்க சென்ற நிலையில் அங்கு மீன் முடிந்த நிலையில் மீனவர்களின் வலையில் சிக்கிய நச்சு தன்மை கொண்ட மீனை அங்கு மீனவர்கள் விட்டுச் சென்ற நிலையில் அதனை எடுத்து வந்து சமைத்து சாப்பிட்ட ஒரு மணித்தியாலயத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 27 வயதுடைய தில்லையம்பலம் புஜேந்தினி, அவரது 3 வயதுடைய மகன் அஸ்வின், அவரது தாயாரான யூசைமலர், அவரது 20 வயதுடைய சகோதரன் கிறிஸ்ரின் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்நிலையில் 27 வயதுடைய தில்லையம்பலம் புஜேந்தினி உயிரிழந்ததுடன் அவரது மகன் மற்றும் சகோதரன் சிகிச்சை பெற்று வெளியேறிய நிலையில் அவரது தாயார் தொடர்ந்தும் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 6 மணிக்கு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை