வடக்கு - கிழக்கு தழுவிய முழு கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கடையடைப்பு போராட்டமானது நாளைய தினம் (28.07.2023) முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொக்குத்தொடுவாய் புதைகுழியில் இறந்தோருக்கு நீதி கோரிய வடக்கு - கிழக்கு தழுவிய முழு கடையடைப்பு போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாயில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிக்குப் பின்னணியாக இருந்த சம்பவம் என்ன? அங்கு கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள், உடைகள் மற்றும் ஏனைய பொருட்கள் யாருடையவை? என்பன குறித்துப் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் வடக்குக் கிழக்கு முழுவதும் ஜூலை 28 முழுக் கடையடைப்பு நடத்துவதற்கு வடக்குக் கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
அதே தினத்திலே வட்டுவாகல் பாலத்தில் இருந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினை சென்றடையும் வகையிலான ஒரு பேரணியும் இடம்பெறவுள்ளது. இந்த முழுக்கடையடைப்புக்கும் பேரணிக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் முழுமையான ஆதரவினையும், ஒத்துழைப்பினையும் வழங்குகிறது.
இலங்கையில் சுதந்திரத்துக்குப் பிந்தைய காலத்திலே பல்வேறு மனிதப் புதைகுழிகள் சூரியக்கந்த, செம்மணி, யாழ்ப்பாணத்தின் துரையப்பா விளையாட்டரங்கு, மாத்தளை, களுவாஞ்சிக்குடி மற்றும் மன்னார் போன்ற இடங்களிலே கண்டுபிடிக்கப்பட்டன.
இலங்கையினை ஆட்சி செய்த அரசுகள் இன ரீதியாகவும், மத ரீதியாகவும், வர்க்க ரீதியாகவும் மேற்கொண்ட அடக்குமுறைகளுக்கு எதிராக வெவ்வேறு சந்தர்ப்பங்களிலே போராடிய பல்வேறு இயக்கங்களையும், அமைப்புக்களையும் சேர்ந்தோர் சட்டத்துக்குப் புறம்பான முறையிலே, இராணுவமயமாக்கப்பட்ட சூழலிலே படுகொலை செய்யப்பட்டனர்.
அத்துடன் மனித உரிமைகளை முன்னிறுத்திச் செயற்பட்ட செயற்பாட்டாளர்களும், பத்திரிகையாளர்களும், மாற்றுக் கருத்தினைக் கொண்டிருந்த வெவ்வேறு போராட்ட இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் கூட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாத நிலை இன்று வரை நீடிக்கிறது. இவ்வாறு போராட்டங்களிலே ஈடுபட்டுவர்களினதும், செயற்பாட்டளர்களினதும், பொதுமக்களினதும் உடலங்களின் எச்சங்களே இந்தப் புதைகுழிகளிலே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
நாட்டிலே இடம்பெற்ற வன்முறைகளிலே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உடலங்களே இந்தப் புதைகுழிகளிலே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவா என்ற பயம் அவர்களின் உறவினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் உருவாகியுள்ளது. இந்தப் புதைகுழிகள் பற்றி முறையான விசாரணைகளை முன்னெடுத்து நீதியினை பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கையினை ஆட்சி செய்த அரசுகள் நம்பகமான எந்தச் செயன்முறையிலும் ஈடுபடவில்லை.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தொடர்ந்தும் வேதனையினை அனுபவித்து வருவதுடன், கடுமையான பொருளாதாரச் சுமையினையும், அரசின் அச்சுறுத்தல்களையும் அவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். அண்மையில் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய்ப் புதைகுழியிலே கண்டுபிடிக்கப்பட்ட உடைகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சீருடைகளாக இருக்கின்றன.
சரணடைந்த, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்வியினை முன்வைத்து, நீதி கோரும் வகையில், அவர்களின் உறவினர்களும், பொதுமக்களும் பல வருடங்களாகத் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
கொக்குத்தொடுவாயில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழிகள் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலே பயத்தினையும், வேதனையினையும் அவர்களின் குடும்பத்தவர் மத்தியிலும், ஒட்டுமொத்த சமூகத்திலும் ஏற்படுத்தியிருக்கிறது. வெள்ளிக்கிழமை இடம்பெறும் முழுக் கடையடைப்பும், பேரணியும் கொக்குத்தொடுவாயிலே கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி குறித்து நாட்டினதும், உலகினதும் கவனத்தினையும் ஈர்க்கும் வகையிலே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இலங்கை அரசாங்கத்தில் வேரூன்றிப்போயிருக்கும் சட்டத்துக்குப் புறம்பான கொலை செய்யும் கலாசாரத்தினை வெளிப்படுத்தும் வகையிலே அமைகின்றன. எனவே இந்தப் போராட்டத்துக்கு பொதுமக்களும், தொழிற்சங்கங்களும், பொது அமைப்புக்களும் ஆதரவு கொடுக்க வேண்டும்.
கொக்குத்தொடுவாய்ப் புதைகுழி குறித்தும், நாட்டிலே கண்டுபிடிக்கப்பட்ட ஏனைய புதைகுழிகள் குறித்தும் முறையான, நேர்மையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, இந்தப் புதைகுழிகளுக்குப் பின்னணியாக இருந்த வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது உறவுகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும்.
அத்துடன் வடக்குக் கிழக்கிலே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பது குறித்து அரசு உடனடியாக மக்களுக்குப் பொறுப்புக் கூறுவதுடன், அவர்களிற்கான நீதியும் கிடைப்பதற்கு வழி செய்யப்படல் வேண்டும். இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெள்ளிக்கிழமை இடம்பெறும் முழுக் கடையடைப்புக்கும் பேரணிக்கும் தனது முழுமையான ஆதரவினை வழங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலத்தில் இருந்து முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் வரையில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரண்டு கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பல மனிதப் புதைகுழிகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருந்தபோதும், அவை தொடர்பாக இதுவரை அரசுகள் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.
பூசி மெழுகப்பட்டு அவற்றின் விசாரணைகள் நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ள நிலையில், கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்திலும் அதுவே நடக்கும் என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த விசாரணைகள் சரியான முறையில் நடக்க வேண்டும் என்றும், அகழ்வுப் பணிகளில் சர்வதேசக் கண்காணிப்பு அவசியம் என்றும் தமிழ் மக்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நாளை வடக்கு - கிழக்கு மாகாணங்களில் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உட்படப் பல்வேறு அரசியல் கட்சிகள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
வர்த்தக சங்கங்களும், போக்குவரத்துச் சங்கங்களும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. முல்லைத்தீவில் நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கும், வடக்கு - கிழக்கு மாகாணங்களில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கடையடைப்பு போராட்டத்துக்கும் அனைத்துத் தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என்று வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க செயலாளர் கலாரஞ்சினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்தில் இருந்து முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் வரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கவனயீர்ப்புப் பேரணியில் கலந்துகொள்பவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 29ஆம் திகதி முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாயில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபை மேற்கொண்ட குழாய் பொருத்துவதற்கான அகழ்வு நடவடிக்கைகளில் மனித எலும்பு எச்சங்களும், ஆடைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. அதையடுத்து நீதிமன்ற அனுமதி பெற்று கடந்த 6ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட மேலதிக அகழ்வு நடவடிக்கைகளில் 13 மனித உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அகழ்வு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன.
இந்த அகழ்வு நடவடிக்கையைத் தொடர்வதற்கான மேலதிக நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அகழ்வு நடவடிக்கைகளில் தொல்லியல் திணைக்களமும் உள்வாங்கப்படும் என்று தெரியவருகின்றது.