திருகோணமலையில் வெருகல் மலைநீலி அம்மன் ஆலயத்தை இடித்து தற்போது அங்கு பௌத்த விகாரை அமைக்கப்பட்டுவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்லடி பகுதியில் உள்ள மலைநீலி அம்மன் ஆலயத்தின் காணிகள் தொல்லியலுக்குரிய பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டு கையகப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அது பௌத்திற்குரிய பகுதியாக உரிமை கோரி அப்பகுதியில் விகாரை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தொல்லியல் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டு பெளத்த விகாரை அமைக்கப்பட்டு வரும் மலைநீலியம்மன் ஆலயத்துக்குரிய காணிகளை விடு விக்குமாறு அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2006 ஆம் ஆண்டு அப்பகுதியில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து மட்டக்களப்பு உட்பட பல்வேறு இடங்களில் தஞ்சமடைந்தனர். இதன்போது, 1835ஆம் ஆண்டுக்கு முற்பட்ட பழைமையான வரலாற்றைக் கொண்ட மலைநீலி அம்மன் ஆலயமானது விமானத் தாக்குதலினால் சேதத்துக்கு உள்ளாக்கப்பட் டிருந்தது.
இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் 2007ஆம் ஆண்டு மீள குடியமர்ந்த போது அந்த ஆலயம் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு ஆலயத்தின் இடிபாடுகள் அகற்றப்பட்ட நிலையில் தொல்லியலுக்குரிய இடமாகவும் கையகப்படுத்தப்பட்டு அம்மனின் விக்கிரகம் வீதியில் போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த நிலையில் பௌத்த பிக்குகளால் இவ்வாலயமானது பௌத்தத்திற்குரியது எனக் கூறி ஆக்கிரமிக்கப்பட்டதோடு வெளி இடங்களிலிருந்து பாரிய கற்களைக் கொண்டுவந்து பல கட்டுமானங்களும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன் கிராம மக்கள் காலாகாலமாக நெற்செய்கையை மேற்கொண்டு வந்த ஆலயத்தைச் சூழவுள்ள 50 ஏக்கருக்கு மேற்பட்ட வயற்காணிகளும் பறிமுதல் செய்யப்பட்டு தமது வாழ்வாதாரமும் இல்லா தொழிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தொல்லியலுக்குரிய இடமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஆலய வளாகத்தினுள் பிக்குகளின் கட்டுமானங்களுக்கான அனுமதியை வழங்கி பாராபட்சமான முறையில் தொல்லியல் திணைக்களம் செயற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தி வருவதோடு நீண்டகாலமாக வீதியோரத்தில் இருக்கின்ற தமது ஆலயத்தை அந்தக் காணிக்குள்வைத்து வழிபட அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விடயம் குறித்து கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.