அண்மையில் மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பகுதியில் இடம்பெற்ற மயான விடயம் தொடர்பில் விகாராதிபதி அம்பிட்டிய சுமன்ரத்ன தேரருக்கெதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறுகின்ற வழக்கின் விசாரணை தொடர்பில் சம்பவம் இடம்பெற்ற தினத்தில் அங்கு எடுக்கப்பட்ட காணொளிகளின் உண்மைப் பதிவுகளை மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு வழங்குமாறு மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் மற்றும் அதன் பொருளாளர் பு.சசிகரன் ஆகியோருக்கு நீதிமன்றத்தினால் உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஜெயந்திபுரம் பிரதேசத்தில் சிங்கள மயான விடயம் தொடர்பில் அம்பிட்டிய சுமனரத்ன தேரரால் தமிழ்மக்களுக்கு எதிரான இனவாதக் கருத்துகளை வெளியிட்டதுடன், தமிழர்கள் அனைவரையும் வெட்ட வேண்டும் என்றவாறான இனமுறுகலை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் பலரால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அண்மையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிசாருக்கு விடுக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு அமைய ஊடகவியாளர்களிடமிருந்து இவர் தொடர்பான அன்றைய காணொளிகளை கோரும் உத்தரவு இன்றைய தினம் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ் உத்தரவானது தனிச் சிங்கள மொழியில் மாத்திரம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.