2024 பட்ஜெட் 41 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றம்



2024ஆம் நிதியாண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் (ஒதுக்கீட்டுச் சட்டமூலம்) மூன்றாவது வாசிப்பு 41 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் இன்று (13-12-2023) நிறைவேற்றப்பட்டது.

இன்று பி.ப. 6.40 மணிக்கு மூன்றாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டதுடன், இதில் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 81 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தார்.

2024 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது ‘வரவு செலவுத் திட்ட உரை’ நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த 13ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நவம்பர் 14ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஞாயிற்றுக்கிழமை தவிர 07 நாட்கள் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது.

அன்றையதினம் இடம்பெற்ற வாக்கெடுப்பில் இரண்டாவது மதிப்பீடு 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஒதுக்கீட்டுச் சட்டுமூலத்தின் குழு நிலை அமர்வுகள் நவம்பர் 22ஆம் திகதி முதல் இன்று (13) வரை 19 நாட்கள் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து இன்றையதினம் 3ஆம் வாசிப்பு மீதான இறுதி விவாதம் இடம்பெற்றதைத் தொடர்ந்து, அது தொடர்பான வாக்கெடுப்பில் 2024 பட்ஜெட் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதியது பழையவை