கடனாக வாங்கிய 800 ரூபாயை திருப்பி கொடுக்கவில்லை என கடன் கொடுத்தவர் தாக்கியதில் கடன் வாங்கியவர் உயிரிழப்பு!



கடனாக வாங்கிய 800 ரூபாய் பணத்தினை திருப்பி கொடுக்கவில்லை என கடன் கொடுத்தவர் தாக்கியதில் கடன் வாங்கியவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியைச் சேர்ந்த இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சாரதியான சிங்காரத்தினம் சிவாஸ் குமார் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது

ஊரெழு பகுதியைச் சேர்ந்த இளைஞனிடம் 800 ரூபாய் பணத்தினை திருப்பி தருவதாக கூறி கடனாக பெற்றுள்ளார். அந்த பணத்தினை திருப்பி வழங்காததால் , கடந்த 10ஆம் திகதி கடன் கொடுத்த இளைஞன், கடன் வாங்கியவருடன் முரண்பட்டு, அவர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளார்.

தாக்குதலின் பின்னர் அவரை அவரது வீட்டுக்கு அழைத்து சென்று வீட்டாரிடம் ஒப்படைத்து விட்டு, இளைஞன் சென்றுள்ளார்.

மறுநாள் தாக்குதலுக்கு இலக்கானவரின் உடல்நிலை மோசமான நிலையில், வீட்டார் அவரை யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17-12-2023) வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதனை அடுத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , தாக்குதல் நடத்திய இளைஞன் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.

சரணடைந்த இளைஞனை கைது செய்துள்ள பொலிஸார் பொலிஸ்நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
புதியது பழையவை