மட்டக்களப்பில் கதிரவன் அமைப்பினால் நடாத்தப்பட்ட சாதனையாளர் பாராட்டு விழா



மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கதிரவன் அமைப்பினால் நடாத்தப்பட்ட சாதனையாளர் பாராட்டு விழா, புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

வருடா வருடம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை பெற்று சித்தி அடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும்
வகையில் சாதனையாளர் பாராட்டு விழா நடைபெற்றது.

புதுக்குடியிருப்பு கதிரவன் அமைப்பின் தலைவர் இன்பராசா தலைமையில், நிகழ்வு இடம்பெற்றதுடன், நிகழ்விற்கு வருகை தந்த அதிதிகளினால் கதிரவன் நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

பாராட்டு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரன், கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார், மண்முனைப்பற்று கல்வி
கோட்ட கல்வி அதிகாரி தில்லை நாதன், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் புதுக்குடியிருப்பு கதிரவன் அமைப்பின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

புதுக்குடியிருப்பு கதிரவன் அமைப்பானது மாணவர்களின் கல்வி அபிவிருத்தியை மேம்படுத்தும் வகையில் மாணவர்களின் புலமைப்பரிசில், அறநெறி பாடசாலை, பிரதேச மாணவர்களின்
கல்விக்கான உதவி, சமூகம் மற்றும் கல்வி சார்ந்த உதவிகளை வழங்குவதோடு சமூக சாதனையாளர்களையும் பாராட்டும் விதமாக மண்முனை பற்று கல்வி கோட்டத்தில் பல நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றது.
புதியது பழையவை