2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு!




இந்த ஆண்டுக்கான (2024) முதலாவது நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்று வருகிறது.

அதன்படி, நாடாளுமன்றம் இன்று (09-01-2024) முதல் 12ஆம் திகதி வரை கூடவுள்ளது.

இன்று கூடுகின்ற நாடாளுமன்றில் மு.ப 09.30 முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டது.



அதனைத் தொடர்ந்து மு.ப 10.30 மணி முதல் பி.ப 05.00 மணிவரை தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலக சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு), தேசிய நீரளவை சட்டமூலம் (இரண்டாவது மதிப்பீடு), கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டமூலத்தின் கீழ் 2355/30ஆம் இலக்க வர்த்தானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி, இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தின் கீழ் 2334/55ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அதன் பின்னர், இலங்கை பட்டய கப்பல் தரகர்கள் நிறுவக (கூட்டிணைத்தல்) சட்டமூலம், இலங்கை சித்த உளவியல்சார் உயர் கற்கைநெறிகள் திறந்த நிறுவனத்தின் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் என்பன இரண்டாவது மதிப்பீட்டுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளன.

இதனைத் தொடர்ந்து பி.ப 05.00 மணி முதல் பி.ப 05.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போது  ஆளும் கட்சி மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

இதேவேளை இவ்வாரம் கட்சித்தாவல்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 
நேற்றுவரை ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர் ஐக்கிய மக்கள் சக்தியின் பக்கம் செல்ல தீர்க்கமான பேச்சுகளை நடத்தியுள்ளனர்.


அதேபோல பொதுஜன பெரமுனவின் சில உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவளிக்கும் நிமல் லான்சாவின் கூட்டணிக்கு ஆதரவை நாடாளுமன்றில் வெளியிடும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எது எவ்வாறாயினும் அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று (09) நாடாளுமன்றத்திற்கு சென்று, அங்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை அவர் சந்திக்கவுள்ளதாவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை