வெள்ளத்தில் மூழ்கிய தென்கிழக்கு பல்கலைக்கழகம்




சீரற்ற காலநிலை, மழை, வெள்ளம் மற்றும் வான்கதவுகள் திறப்பு காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் கடந்த இரண்டு நாட்களாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.

பல்கலைக்கழகத்தின் மூத்த ஆலோசனைக் குழுவினரின் ஆலோசனைக்கு அமைவாக உபவேந்தர், ஒலுவில் வளாக மாணவர்களுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் எதிர்வரும்16 ஆம் திகதி வரை இடைநிறுத்துவதாக ஏற்கனவே அறிவித்திருந்து.


இந்நிலையில் நேற்று(12-01-2024) கூடிய பல்கலைக்கழகத்தின் மூத்த ஆலோசனைக் குழுவினரின் நீண்ட ஆலோசனைக்களுக்கு அமைவாக கல்வி நடவடிக்கைகளை மேலும் நீடித்து எதிர்வரும் 22ஆம் திகதி வரை அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் ஒத்திவைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.



பல்கலைக்கழக எல்லைக்குள் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் அனர்த்தம் ஏற்படலாம் என சந்தேகித்த இடங்களில் இருந்த அகற்றக்கூடிய அனைத்து பொருட்களை பல்கலைக்கழக அனர்த்த முகாமைத்துவ குழுவில் கண்காணிப்பில் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

இருந்தபோதும் தொடர்ச்சியான மழையின் காரணமாக ஏற்பட்ட அவசரகால வான்கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக எதிர்பாராத சில பிரதேசங்களையும் வெள்ளம் ஆக்கிரமித்திருந்தது.

முப்படையின் ஒத்துழைப்பு
இவ்வாறான சூழலில் பல்கலைக்கழகத்தில் அவசர நிலையை பிரகடனப்படுத்திய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பல்கலைக்கழகத்தின் மூத்த ஆலோசனைக் குழுவினரின் கண்காணிப்பின் கீழ், எஞ்சிய மீட்க்கப்பட வேண்டிய இடங்களில் இருந்த ஆவணங்களையும் பல்கலைக்கழக சொத்துக்களையும் பாதுகாக்கும் அகற்றும் நடவடிக்கைகளில் பல்கலைக்கழக ஊழியர்கள் ஈடுபட்டடதாக தெரிவித்துள்ளார்.



பல்கலைக்கழக ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் மீட்புப்பணிகளில் ஈடுபட்டிருந்த அதேவேளை முப்படையினரும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை