மசாஜ் சேவையை பெற்றுக்கொள்ள சென்ற வெளிநாட்டு பெண்- பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்க முயற்சி



இலங்கையில் மசாஜ் சேவையை பெற்றுக்கொள்ள சென்ற அவுஸ்திரேலிய பெண்ணொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்க முயற்சித்ததாக கூறப்படும் நபர் தொடர்பில், குறித்த பெண் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


கொழும்பிலிருந்து கண்டிக்குச் செல்லும் வழியில் கடுகண்ணாவை பிரதேசத்தில் இயங்கும் மசாஜ் நிலையத்தில் குறித்த சம்பவம் வெள்ளிக்கிழமை (09-02-2024) இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, கடுகண்ணாவை பிரதேசத்தில் இருந்து நுவரெலியாவிற்கு வருகை தந்து நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


தனக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பில் 39 வயதான அவுஸ்திரேலிய பெண், பொலிஸ் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாட்டில், எனது கணவர் மற்றும் குழந்தையுடன் சுற்றுலா நிமிர்த்தம் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதி இலங்கைக்கு வந்தோம்.


கூடுதலான சுற்றுலா இடங்களை பார்வையிட்டு கடந்த 9ஆம் திகதி கடுகண்ணாவை பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தோம்.


அன்று மாலை குறித்த ஹோட்டலில் மசாஜ் நிலையத்துக்கு சென்றிருந்தேன். தலை மற்றும் தோல்பட்டை போன்ற பகுதிகளுக்கு மசாஜ் செய்துகொள்ள சென்றிருந்தேன். அங்கு மசாஜ் செய்த ஊழியர் எனது அந்தரங்க பகுதிகளை அவசியமின்றி தொட்டார். உடனடியாக அங்கிருந்து வெளியேறிவிட்டேன்.

அதன் பின்னரே அங்கிருந்து நுவரெலியாவுக்கு உடனடியாக வருகை தந்தோம் என அந்த முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் நுவரெலியா பொலிஸார், கண்டி, கடுகண்ணாவை பொலிஸாருக்கு தெரிவித்துள்ளதுடன் சுற்றுலா பொலிஸாரின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர்.
புதியது பழையவை