மட்டக்களப்பில் மீண்டும் ஓரணியில் தமிழரசுக் கட்சி



மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியினர் தொடர்ந்தும் ஓரணியில் ஒற்றுமையாக செயற்பட்டு தந்தை செல்வாவின் வழியில் செல்ல உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயற்குழுவில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக இன்று (15-03-2024) மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன், முன்னாள் மேயர் தி.சரவணபவன் ஆகியோர் இணைந்து நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்படி கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.



பொதுச் சபை கூட்டங்கள் 
இதன் போது தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை கடந்த காலங்களில் நடைபெற்ற கசப்பான சம்பவங்களை மறந்து ஓரணியில் செயற்பட தீர்மானித்துள்ளோம்.




தேசிய ரீதியில் தமிழரசுக் கட்சிக்குள் எழுந்துள்ள செயலாளர் தெரிவு உள்ளிட்ட பிரச்சினைகளை தமிழரசுக் கட்சியின் பொதுச் சபை கூட்டங்கள் நடைபெறும் போது அங்கு பேசி தீர்மானிப்பதாகவும், மாவட்ட கிளை என்ற அடிப்படையில் அனைத்து தமிழரசுக் கட்சி உறுப்பினர்களும் ஓரணியில் திரண்டு ஒற்றுமையுடன் செயற்பட உள்ளதாக கூறியுள்ளனர்.




மேலும், எதிர்வரும் காலங்களில் நடைபெற உள்ள தமிழரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வாவின் பிறந்தநாள் நிகழ்வுகள் மற்றும் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட விடயங்களை கருத்தில் கொண்டு தமிழரசுக் கட்சி புது உத்வேகத்துடன் செயற்பட உள்ளதாகவும், தமிழர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற கட்சி என்ற வகையில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் தமிழரசுக் கட்சிக்கான ஆதரவை வழங்கி வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை தமிழரசுக் கட்சி கைப்பற்றுவதற்காக அனைவரும் ஓரணியில் ஒற்றுமையாக செயற்படவுள்ளதாகவும் தெரித்துள்ளனர்.
புதியது பழையவை