கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு கோரி ஆர்ப்பாட்டம்



கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் சம்பளப் பிரச்சினை மற்றும் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாதுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று (19-03-2024) மட்டக்களப்பு அரசடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரி கற்கைகள் நிலைய முன்பாக கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத்தின் தலைவர் ஏகாம்பரம் ஜெகராஜ் தலைமையில் முன்னெடுக்ப்பட்டுள்ளது.


அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு இணங்க நாட்டில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அமைவாக கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கம் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இதன் போது 2016ஆம் ஆண்டு சம்பள சீர்திருத்தத்திற்கு அமைவாக பல்கலைக்கழக ஊழியர்களுக்கு தருவதாக அரசினால் வாக்குறுதியளிக்கப்பட்டு இன்றுவரை வழங்கப்படாதுள்ள 15 வீத சம்பள அதிகரிப்பை வழங்கு, மாதாந்த இடர் கொடுப்பனவை அதிகரி, பல்கலைக்கழக சேமலாப நிதியை வேறு தேவைகளுக்கு அரசாங்கம் பயன்படுத்தாதே, யாருடைய படையிது பல்கலையின் படையிது, அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கேற்ப ஊதிய அதிகரிப்புச் செய்ய வேண்டும்.


பல்கலைக்கழகங்களில் காணப்படும் நீண்டகாலமாக காணப்படும் பதவி வெற்றிடங்களை நிரப்பு, மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையில் கைவைக்காதே, அரசே ஏற்றுக் கொள்ளப்பட்ட சம்பள அதிகரிப்பை வழங்கு போன்ற பல்வேறு வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறும், கோசங்கள் எழுப்பியவாறும் ஆர்பாட்டத்தில் சுமார் ஒருமணித்தியாலம் ஈடுபட்ட பின்னர் ஆர்பாட்காரர்கள் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர்.

இதேவேளை ஒவ்வொரு வாரமும் தீர்வு கிடைக்கும் வரை இப் போராட்டம் இடம்பெறும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை