மட்டக்களப்பில் ஆசிரியர் இடமாற்றத்தில் முறைகேடா? பாடசாலைக்குள் தற்கொலை செய்ய முயற்சித்த ஆசிரியை





மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறி பல ஆசிரியர்கள் மேன் முறையீடு செய்துள்ளனர்.

இவ்வாறு மேன்முறையீடு செய்து அது ஏற்றுக்கொள்ளாத நிலையில் ஆசிரியர் ஒருவர் பாடசாலைக்குள் தற்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்களில் நகர் புறங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு கஷ்ட பிரதேசங்களுக்கு இடமாற்றம் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக ஆசிரியர்கள் பலர் மேன்முறையீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.



இன்நிலையில் மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் இடமாற்றத்தால் ஆசிரியை ஒருவர் பாடசாலை வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவமொன்று நேற்று (01-03-2024) இடம் பெற்றுள்ளது.

கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் கடமையாற்றும் ஆசியை ஒருவரே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

மேற்படி பாடசாலையின் கடமையாற்றி வந்த அதிபர் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்று சென்றதனையடுத்து புதிதாக அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். புதிய அதிபருக்கும் ஆசிரியைக்கும் இடையில் தெடர்ச்சியாக முரண்பாடு நிலவியது. இந்த நிலையில், வலயம் விட்டு வலயம் இடமாற்றம் செய்யப்பட்டு மாகாண கல்வி திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட இடமாற்ற பட்டியலில் ஆசிரியையின் பெயர் இடம் பெற்றுள்ளது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்த ஆசிரியை இடமாற்றம் தொடர்பில் மேன்முறையீடு செய்துள்ளார்.

இந் நிலையில் நேற்று முன்தினம் இடமாற்றக் கடிதம் வந்தவுடன் ஆசிரியையை உடனடியாக அனைத்து பொறுப்புக்களையும் கையளித்து செல்லுமாறு அதிபர் வற்புறுத்தியதினையடுத்து விரக்தி அடைந்த ஆசிரியை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் விரைந்து செயற்பட்ட சக ஆசிரியர்கள் அவ் ஆசிரியையை தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றியுள்ளனர். ஆசிரியை தற்போது மட்டு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.


இச் சம்பவம் தொடர்பில் பாடசாலை கல்வி சமூகத்தினர் மேல் அதிகாரிகளிடம் முறையீடு செய்துள்ளனர். மேற்படி பாடசாலையின் அதிபர் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தில் உயர் பதவி வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை