மட்டக்களப்பில் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் வீட்டில் திருட்டு




மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் ஜக்கிய தேசிய கட்சி பெண் உறுப்பினர் ஒருவரின் வீடு உடைத்து  தங்க ஆபரணம், புகைப்படக்கருவி, பணம் ஆகியவற்றை திருடிச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (11-03-2024) அதிகாலை 2.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 



நகர்ப்பகுதியான அலெக்ஸ் அவனியூர் வீதியில் அமைந்துள்ள குறித்த முன்னாள் மாநகரசபை பெண் உறுப்பினர் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இரவு பிள்ளைகளுடன் வீட்டின் அறையில் உறங்கிக் கொண்டிருந்துள்ளார்.



இந்த நிலையில் சம்பவதினமான நேற்று அதிகாலை 2.30 மணிக்கு வீட்டின் சமையலறை யன்னல் கிறிலை கழற்றி உள்நுழைந்த திருடன் அறையில் அலுமாரியில் வைத்திருந்த சங்கிலி உட்பட 27 ¾ பவுண்கள் கொண்ட தங்க ஆபரணங்களையும் 3 இலட்சத்து 17 ஆயிரம் ரூபா பணம், 6 இலட்சம் ரூபா பெறுமதியான புகைப் படகருவி என்பவற்றை திருடிச் சென்றுள்ளதாகவும் பெண் உறுப்பினர் கண்விழித்த போது திருடனை கண்டுள்ளதாகவும் ஆனால், அவரால் படுக்கையில் இருந்து எழும்ப முடியாதவாறு மயக்க நிலை இருந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


மேலதிக விசாரணை
இதனையடுத்து, பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பதில் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ஜே.எம்.எஸ்.ஜே. றகீம் தலைமையிலான பொலிஸார், தடயவியல் பிரிவினர் அழைக்கப்பட்டு விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


அதேவேளை குறித்த மாநகர சபை உறுப்பினரின் வீடு உடைப்பதற்கு முன்னர் அவரின் வீட்டிற்கு அருகிலுள்ள ஒலிவ்லேன் வீதியில் இரு வீடுகளின் யன்னலை உடைத்து திருடர்கள் நுழைந்துள்ளதாகவும் எதுவிதமான பொருட்களை திருடிச் செல்லவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை