ஜனாதிபதி ரணிலின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி!




சர்வதேச மகளிர் தினமான இன்று(08-03-2024) இலங்கைப் பெண்களுக்கு தனது மகளிர் தின வாழ்த்துக்களை அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாக

“பாரம்பரிய வகிபாகங்களுக்கு அப்பாற்பட்ட அறிவு, திறன் மற்றும் தொழில் தன்மையுடன் கூடிய இலங்கைப் பெண்கள் இன்று இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு தனித்துவமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

இத்தகைய பின்னணியில் குடும்பம் மட்டுமின்றி சமூகத்திலும் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டிருக்கும் பெண்கள் நாட்டின் அபிமானத்திற்குரியவர்கள்.

பாலினக் கொள்கை அறிமுகம்
நிலையான அபிவிருத்திக்கான பயணத்தில் பெண்களின் பங்களிப்பை மேலும் பலப்படுத்த அரசாங்கம் தற்போது விரிவான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருவதோடு, டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத்திற்காக பெண் தொழில்முனைவோரை வலுவூட்டுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.


மேலும், மகளிர் தினத்தை ஒரு தினத்திற்கு மட்டுப்படுத்தாமல், புதிய சட்ட திட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்கி பெண்களின் அபிமானம் மற்றும் பாதுகாப்பிற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், பெண்கள் மீதான பாகுபாட்டைத் தவிர்க்க, முதல் முறையாக தேசிய ஆண் /பெண் பாலினக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளமை சிறப்பம்சமாகும்.

தேசிய மகளிர் ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதோடு, பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்கான இரண்டு புதிய சட்டங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.


அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம்

மேலும், பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுப்பதற்கான ஐந்தாண்டு தேசிய செயற்திட்டம் தற்போது இறுதி செய்யப்பட்டு அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.


அத்தோடு அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கத் தேவையான சட்டத் திருத்தங்களையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் வளம்மிக்க நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஒட்டுமொத்த பெண்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதோடு, சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.“ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதியது பழையவை