சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்த ஈழத் தமிழர்கள் - முருகன், ரொபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார்



இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முருகன், ரொபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தற்போது இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் மூவரும் இன்று(03-04-2024) இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக அவர்கள் சார்பில் வழக்குகளில் முன்னிலையான தமிழக சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்திருந்தார்.

இவர்கள் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து நேற்று இரவு 11.15 மணிக்கு சென்னைக்கு காவல்துறை வாகனம் மூலம் அழைத்து வரப்பட்டனர்.


இன்று(03-04-2024) முற்பகல் 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து இலங்கை நோக்கி பயணித்த இவர்கள் மூவரும் தற்போது 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.


மேலும் அவர்களுக்கு இலங்கைக்கு செல்வதற்கு மாத்திரமே இந்தியாவிலுள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாகவும் சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இலங்கை தமிழர்களான முருகன், ரொபர்ட் பயஸ், எஸ்.ஜெயக்குமார் மற்றும் சாந்தன் ஆகிய நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் இதில் சாந்தன் நோய்வாய்ப்பட்டு கடந்த மாதம் உயிரிழந்ததையடுத்து அவரது உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு யாழ்ப்பாணத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை