சாணக்கியன் எம்பி - பிரித்தானிய உ யர்ஸ்தானிகரிடையே விசேட சந்திப்பு!



மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் நேற்றைய தினம் (29-04-2024) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மேற்கொண்ட சிறப்பு விஜயத்தின்போதே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது மாவட்ட மற்றும் தேசியப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.


குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள், நேரடியாக முகம் கொடுக்கும் பிரச்சினைகளான மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை, கனிய வளங்களான இல்மனைட் அகழ்வு இறால் வளர்ப்பு திட்டம் சம்பந்தமான சமூக மற்றும் சுற்றுச்சூழல் ரீதியிலான பிரச்சினைகள் மற்றும் சட்டவிரோத காணி அபகரிப்பு தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு சார்ந்த விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் விவசாய ஆரம்பக் கொடுப்பனவானது பொலன்னறுவையை சார்ந்தே இங்கு கொடுக்கப்படுகின்றது.

ஆனால் இங்கு பயிரிடப்படும் போகங்கள் வித்தியாசமானதாகும். பல நேரங்களில் போகம் முடியும் தருவாயில் பணம் கொடுக்கின்றார்கள்.



உரத்துக்கான கொடுப்பனவும் இவ்வாறே நிகழ்கின்றது. எமது மூலோபாய வாழ்வாதாரமான விவசாயம் மீன்பிடி கால்நடை இவை மூன்றுமே இங்கு பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றது என்பதையும் வலியுறுத்தியுள்ளேன் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் எமது மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மிகப் பின்னடைந்து காணப்படுகின்றது. தேசிய ரீதியில் எடுத்துக்கொண்டால் எமது மக்களுக்கு அதிகாரப்பகிர்வு இல்லாமையே இவ்வாறான சிக்கல்களையும் பாரிய சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

எமக்கான அதிகாரப் பகிர்வு கிடைக்குமிடத்து வடக்கு கிழக்கை செழிப்புறும் பிரதேசமாக மாற்ற எம்மால் முடியும். மற்றும் எம்மால் எம் மக்களுக்கு தேவையான முடிவுகளை மேற்கொள்ள முடியும்.

வாழ்வாதாரத்தையும் கட்டியெழுப்ப முடியும். எமது மக்களுக்கான அதிகாரப் பகிர்வு கிடைக்க சர்வதேச பலம் பொருந்திய நாடுகள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
புதியது பழையவை