குமுதினி படுகொலையின் 39 ஆவது நினைவேந்தல் நிகழ்வு!




யாழில் நெடுந்தீவு குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவுத் தூபியில் இன்று (15-05-2024) நடைபெற்றுள்ளது.




இந்த நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.


அத்துடன் பசுந்தீவு ருத்திரன் எழுதிய குமுதினி படுகொலை நினைவுகளைச் சுமந்த " உப்புக் கடலை உரசிய நினைவுகள்"என்ற கவி நூல் வெளியீடும் நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் தரித்து நிற்கும் குமுதினி படகில் சிவகுரு ஆதின முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகளால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.




இதனை தொடர்ந்து, குமுதினி படகில் இருந்து கடலில் மலர்தூவி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


மேலும், உயிரிழந்தவர்களின் நினைவாக மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.




1985 ஆம் ஆண்டு இதே போன்ற நாளில் நெடுந்தீவு கடற்பரப்பில் நெடுந்தீவு மாவிலித்துறை முகத்தில் இருந்து யாழ். புங்குடுதீவு குறிகாட்டுவான் நோக்கி கடலில் குமுதினி படகில் மக்கள் பயணித்த போது கடற்படையினரால் 07 மாத பெண் குழந்தை பெண்கள் அடங்கலாக உட்பட 36 பேர் நடுக்கடலில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.


இந் நினைவேந்தல் நிகழ்வில் சிவகுரு ஆதீன குரு முதல்வர் வேலன்சுவாமிகள் நெடுந்தீவு பங்குத்தந்தை S.பத்திநாதன் மத தலைவர்கள் படுகொலையில் உயிழந்தவர்களின் உறவுகள் பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
புதியது பழையவை