மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள தோனா பகுதியினை அபகரிக்கும் முயற்சி முறியடிப்பு!



மட்டக்களப்பு  கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள தோனா பகுதியினை சிலர் அபகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில், நேற்றைய தினம் (26-05-2024) ஒரு குழுவினர் சிசிரிவி கருவிகளை பொருத்தி வேலிகள் இடும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்  மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த இடத்திற்கு இன்று(27-05-2024)சென்ற இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் மட்டக்களப்பு மாநகரசபையின் உதவியுடன் அந்த பகுதியில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்பினை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், அங்கு காணிகளை அடைப்பதற்காக கொண்டுவரப்பட்ட பொருட்கள் மற்றும் சிசிரிவி கருவிகள் அகற்றப்பட்டு மாநகரசபைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

அதேவேளை, இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதுமாத்திரமன்றி, குறித்த காணி தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றுவரும் நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும், இந்த பகுதியானது வெள்ள நிலைமைகளின் போது வெள்ளநீர் வழிந்தோடுவதற்கான பிரதான பகுதியாக காணப்படுவதுடன் அது மூடப்படுமானால் கல்லடி தொடக்கம் காத்தான்குடி வரையான பகுதி வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கடந்த காலத்தில் இந்த பகுதியை அடைப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட பல முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் மீண்டும் ஒரு தரப்பினரால் அபகரிக்க முயற்சிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை