திருகோணமலையில் கார் விபத்து - சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!



திருகோணமலை ஈச்சிலம்பற்று, வட்டவன் பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவமானது இன்று (23-05-2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில், 6 வயதுடைய நிதர்சன் ஆதித்யா எனும் சிறுமி உயிரிழந்துள்ளதுடன் சிறுமியின் சகோதரனான 4 வயதுடைய நிதர்சன் அதிரேஸ் எனும் சிறுவன் படுகாயமடைந்துள்ளார்.


இவ்வாறு படுகாயமடைந்த சிறுவன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


யாழ்ப்பாணம் – பருத்தித்துறையைச் சேர்ந்த கணவன், மனைவி இருவரும் இரண்டு பிள்ளைகளுடன் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கையிலேயே, அவர்கள் பயணித்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

எனினும், கணவன், மனைவி இருவரும் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


மேலும், உயிரிழந்த சிறுமியின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
புதியது பழையவை