தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கை முடிவுறுத்த தீர்மானம் - சிறீதரன் எம். பி



நிவாரணங்களை வழங்கி வழக்கை முடிவுறுத்த கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் பொது வேட்பாளர் விடயத்தில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியா, இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள விருந்தினர் விடுதியில் இன்று (19-05-2024) இடம்பெற்றுள்ளது.

இதன் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.


வழக்காளி கோருகின்ற நிவாரணங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், “கட்சியின் முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக மத்தியகுழு கூடி ஆராய்ந்திருந்தது. எமது கட்சிக்கு எதிராக திருகோணமலையில் தொடப்பட்ட வழக்கு தொடர்பாக பேசப்பட்டது. நீண்ட நேரம் அது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.


அந்த வழக்கை வழக்காளி கோருகின்ற நிவாரணங்களை வழங்கி, எமது கட்சியினுடைய நிலைப்பாடுகளையும் நிலைநிறுத்தி இதுவரை காலமும் கட்சியில் மேற்கொள்ளப்பட்ட யாப்பினுடைய அடிப்படை விதிகளின் திருத்தங்களுக்கு அமைய செயலாற்றி இருக்கிறோமோ அதனை வலியுறுத்தி யாப்பின் அடிப்படையில் திரும்பவும் தலைவர் தொடக்கம் அனைத்து பதவிகளையும் தெரிவு செயவது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, வழக்கை மீள்பெறுவதற்கான ஒரு முடிவாக எதிராளியாக இருக்கும் நாங்கள் வழக்காளி கோரும் நிவாரணங்களை வழங்கி கட்சியை நாங்கள் எமது கைகளுக்கு கொண்டு வருகின்ற முயற்சியை எடுத்துள்ளோம்.


இந்த விடயம் தொடர்பாக கையாள்வதற்கு ஜனாதிபதி சட்டத்திரணியும், கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான கே.வி.தவராசா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை நியமித்துள்ளோம்.

முதலாவது வழக்கிலேயே வழக்காளி கோருகின்ற நிவாரணங்களை வழங்க ஒப்புக்கொண்டுள்ளோம். இதில் சில விடயங்களை தவறவிட்டுள்ளோம்.

அதனை சமர்பணங்கள் மூலம் சமர்பித்து இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து கட்சியை முன்னெடுப்பதாக தீர்மானித்துள்ளோம் ” என தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை