கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை திறப்பு!



வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய கதிர்காமத்துக்கான குமுண தேசிய பூங்கா உடான காட்டுப்பாதை இன்று (30-06-2024) ஞாயிற்றுக்கிழமை  திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ செந்தில் தொண்டமானின் முன்னிலையில் காலை 6.00 மணியளவில் பாதை திறக்கப்பட்டது.


இம் முறை காட்டுப்பாதையூடாக சுமார் 45 ஆயிரம் பக்தர்கள் பாதயாத்திரையை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை 5.30 மணிக்கு உகந்தை மலை முருகன் ஆலயத்தில் பிரதம குரு சிவசிறி க.கு. சீதாராம் குருக்கள் விசேட பூஜை நடாத்தி ஆசியுரை வழங்கினார். அதைத் தொடர்ந்து  காலை 7 மணியளவில் காட்டுப் பாதை திறக்கப்பட்டது.

இன் நிகழ்வில்  முதல் காலையிலேசுமார் 3000 பாதயாத்திரீகர்கள் பயணித்தனர்.



யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பித்த ஜெயா வேல்சாமி தலைமையிலான மிகநீண்ட பாதயாத்திரை அடியார்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டார்கள்.
கதிர்காம காட்டுப் பாதை மொத்தம் 56 மைல்கள் ஆகும்.

உகந்தையிலிருந்து ஐந்து மைல்தூரத்தில் வாகூரவட்டை .பின்பு 7 மைல் தூரத்தில் குமுக்கனாறு 12 மைல் தூரத்தில் நாவலடி. பின்னர் 11 மைல் தூரத்தில் வியாழை. 6 மைல் தூரத்தில் வள்ளி அம்மன் ஆறு. 8 மைல் தூரத்தில் கட்டகாமம். அடுத்து 8 மைல் தூரத்தில் கதிர்காமம் மொத்தமாக காட்டுப்பாதை 56 மைல்களை உள்ளடக்கியது .

சுமார் 6 நாட்கள் இந்த பயணத்தை அடியார்கள் மேற்கொள்வது வழமை.

கதிர்காம கொடியேற்றம்  எதிர்வரும் (06 -07-2024)ஆம் திகதி நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.


புதியது பழையவை