நாடளாவிய ரீதியில் இரண்டு முதல் ஏழு நாட்களுக்கு மதுபான சாலைகளுக்கு பூட்டு



பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு (21-06-2024)ஆம் திகதி வெள்ளிக்கிழமை, நாடு தழுவிய ரீதியில் அனைத்து மதுபானங்களின் விற்பனையும் தடைசெய்யப்பட்டுள்ளதுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட புனித வலயங்களில் இரண்டு முதல் ஏழு நாட்கள் வரை மதுபானம் விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக கலால் ஆணையாளர் நாயகம் எம். ஜே. குணசிறி அறிவித்துள்ளார்.


இதேவேளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் மதுபான சாலைகள் மூடப்படுவதுடன் தம்புள்ளை மற்றும் திஸ்ஸமஹாராம நகர சபைக்குட்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பொசன் பண்டிகை வலயங்களில் 21 வெள்ளிக்கிழமை மற்றும் 22 சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு மதுபான சாலைகள் மூடப்படும் என தெரிவித்துள்ளார்.


மத்திய நுவரகம் பலாத்த , கிழக்கு நுவரகம் பலாத்த மற்றும் மிஹிந்தலை ஆகிய பிரதேச செயலகங்கள் உட்பட அனுராதபுரம் புனித நகரை உள்ளடக்கிய பகுதிகளில் நேற்று(18-06-2024) முதல் 24 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படும் பொசன் வாரத்தில் ஏழு நாட்களுக்கும் மதுபான விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது.


மேலும் உரிமம் பெற்ற அனைத்து மதுபானக் கடைகள், பார்கள் மற்றும் மதுபானங்களை விற்பனை செய்யும் உணவகங்கள் இந்த காலப்பகுதியில் மூட உத்தரவிடப்படும் என்றும் கலால் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை