குச்சவெளி பிரதேச சபையை மு.காவுடன் இணைந்து ஆட்சியமைக்க தமிழரசுக் கட்சியின் மூன்று உறுப்பினர்கள் எதிர்ப்பு!



முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து குச்சவெளி பிரதேச சபையை ஆட்சியமைக்க தமிழரசுக் கட்சியின் மூன்று உறுப்பினர்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதனால் குச்சவெளி பிரதேச சபையை இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியமைப்பதில் பாரிய இழுபறி நிலை தோன்றியுள்ளது.

திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச சபை மற்றும் குச்சவெளி பிரதேச சபை ஆகியவற்றில் தமிழரசுக் கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆகியன இணைந்து ஆட்சியமைப்பதற்கான பல நிபந்தனைகளுடன்கூடிய ஒப்பந்தம் நேற்றைய தினம் (27-05-2025) திருகோணமலை தமிழரசுக் கட்சி காரியாலயத்தில் கைச்சாத்திடப்பட்டது. 

குறித்த ஒப்பந்தத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீகும் தமிழரசுக் கட்சி சார்பாக திருகோணமலை மாவட்ட குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் ஆகியோர் கையொப்பமிட்டனர்.

குறித்த ஒப்பந்தத்தில் மூதூர் பிரதேச சபை மற்றும் குச்சவெளி பிரதேச சபை ஆகியவற்றில் இரு கட்சிகளும் தலா இரண்டு வருடங்களை பகிர்ந்து கொள்வதெனவும், மூதூர் பிரதேச சபையின் முதல் இரண்டு வருடங்களை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கு தவிசாளர் பதவியையும், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்கு உப தவிசாளர் பதவியை வழங்குவது எனவும் இறுதி இரண்டு வருடங்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்கு தவிசாளர் பதவியும், தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு உப தவிசாளர் பதவியையும் வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது.

அதேபோன்று குச்சவெளி பிரதேச சபையில் முதல் இரண்டு வருடங்களை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்கு தவிசாளர் பதவியையும், தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு உப தவிசாளர் பதவியை வழங்குவதெனவும், இறுதி இரண்டு வருடங்களுக்கு தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு தவிசாளர் பதவியையும், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்கு உப தவிசாளர் பதவியையும் வழங்குவதெனவும் இணங்கியே இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுக் கொண்டனர். 

இந்நிலைமையில், குச்சவெளி பிரதேச சபையை  முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க போகப் போவதில்லையென்று தமிழரசுக் கட்சியின் மூன்று உறுப்பினர்கள் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்து நேற்றைய தினம் (27) நடந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை