ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய நிகழ்வு.!

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் தம்பான ஆதிவாசி அருங்காட்சியக வளாகத்தில் நேற்று (09.08.2025) இடம்பெற்றது.


இலங்கையின் பிரதான ஆதிவாசியினத் தலைவரான, விஷ்வகீர்த்தி வனஸ்பதி ஊருவரிகே வன்னியலெத்தோ, 1996 ஆம் ஆண்டு ஜெனீவாவில் இடம்பெற்ற ஆதிவாசிகள் மாநாட்டில் கலந்து கொண்டபோது, உலக ஆதிவாசிகள் தின நிகழ்வினை இலங்கையில் நடாத்துவது குறித்த கருத்தாடல் ஆரம்பமானது.

அதன்படி, இலங்கையின் முதல் தேசிய ஆதிவாசிகள் தின நிகழ்வு 1999 ஆம் ஆண்டு கொழும்பு விஹார மகா தேவி பூங்காவில் நடைபெற்றது.


அந்தவகையில் இந்த தடவையும் , பல்வேறு அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து தேசிய ஆதிவாசிகள் தின நிகழ்வினை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தன.

அமைதி மற்றும் சுபீட்சத்திற்காக ஆசீர்வதிக்கப்பட்ட பாரம்பரிய “கிரி கொரஹா” சம்பிரதாயம் உட்பட ஆதிவாசிகளின் தனித்துவமான பல்வேறு கலாசார அம்சங்களுடன் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.


ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் ஆதிவாசிகள் தலைவர் ஊருவரிகே திஸாஹாமியின் உருவச்சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு அருங்காட்சியக வளாகத்தில் ஜனாதிபதியினால், வெண்சந்தன செடி நடப்பட்டது.

இலங்கையின் பிரதான ஆதிவாசியின தலைவரான, விஷ்வகீர்த்தி ஸ்ரீ வனஸ்பதி ஊருவரிகே வன்னியலெத்தோ, ஆதிவாசியினரின் பிரச்சினைகள் அடங்கிய ஒரு மகஜர் ஒன்றை ஜனாதிபதியிடம் கையளித்ததுடன், நினைவுப் பரிசொன்றையும் வழங்கிவைத்தார்.


ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் ஆதிவாசியின தலைவருக்கும் அன்பளிப்பு ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

ஆதிவாசியின சமூகத்தினரின் உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தல் மற்றும் தேசிய வளங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இலங்கையில் முதல் ஆதிவாசி மூலிகை சவர்க்காரம் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், ஆயுர்வேத சவர்க்காரத் தயாரிப்பு பயிற்சியை நிறைவு செய்த ஆதிவாசியின பெண்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
புதியது பழையவை