சத்துருக்கொண்டான் படுகொலை - சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும்!



கிழக்கில் ஊர்காவல் படையினராலும் இராணுவத்தினராலும் நடத்தப்பட்ட மிகப்பெரும் படுகொலையான சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் என்பதுடன் அப் படுகொலை நடைபெற்றதாகக் கூறப்படும் இராணுவமுகாமில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் வைரமுத்து குழந்தைவடிவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.


மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் ”மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 1990.09.09 அன்று சத்துருக்கொண்டான் பனிச்சையடி கொக்குவில் பிள்ளையாரடி ஆகிய கிராமங்களில் 184 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.


இலங்கை இராணுவத்தினராலும், ஊர்காவல் படையினராலும் இப் படுகொலை இடம்பெற்றது. இப் படுகொலைக்கு நேரடியாக சாட்சியங்களும் உள்ளன. இந்த படுகொலையில் நேரடியாக பாதிக்கப்பட்டவன் என்ற சார்பில் இந்தப் படுகொலைச் சம்பவம் விசாரணை செய்யப்பட வேண்டும்.

புதிய அரசாங்கத்தில் இது போன்ற படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  உதாரணமாக செம்மணி படுகொலை தொடர்பில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் கிழக்கு மாகாணத்திலும் சத்துருக்கொண்டான் படுகொலை எனக் கூறப்படும்  படுகொலைச் சம்பவம் அரங்கேறி இருந்தது.
குறித்த சம்பவத்தின் போது சத்துருக்கொண்டானில் அமைந்த இராணுவ முகாமில் 184 பேர் அழைத்துச் செல்லப்பட்டு  வாளாளும் கத்தியாலும் வெட்டப்பட்டு, டயர்களுடன்  சேர்த்து எரிக்கப்பட்டனர்.

இப்படுகொலை சம்பவத்துக்கான  நீதி இதுவரையிலும் கிடைக்கப்பெறவில்லை.


இரண்டு ஆணை குழுவில்  நான் சாட்சிகள் தெரிவித்துள்ளேன் ஒன்றும் சந்திரிகா அம்மையார் கால ஆனைகுழுவில் சாட்சிகள்  தெரிவித்திருந்தேன் ஆனால் இன்றும் நீதி கிடைக்கவில்லை. இதில் நேரடியாக சந்திரிகா  அம்மையார் ஒரு ஆனைக்குழுவை நிறுவி இதில் ஓய்வு பெற்ற ஒரு நீதி அரசர் பாலகிட்ணர். விசாரணை செய்ததில் நான்கு இலங்கை ராணுவத்தினர் இனங்காணப்பட்டு பெயர்களும் இங்கே கூறப்பட்டது.


இதில் முக்கியமான சூத்திரதாரி பிரிகேடியர் பேர்சி பெனாண்டோ, கேப்டன் ஹெரத், கேப்டன் வர்ணகுலசூரிய,  கேப்டன் விஜயநாயக்க  இந்த நால்வரும் அந்த ஆணைகுழுவால் இவர்கள்தான் படுகொலைக்கு முக்கிய சூத்திரதாரி என்று இனங்காணப்பட்டு இதுவரைக்கும் எந்த நீதியும் கிடைக்கப்பெறவில்லை.

எனவே இந்த படுகொலையை உடனடியாக இந்த புதிய அரசாங்கம் இதனை சர்வதேச விசாரணைக்கு கொண்டு செல்ல வேண்டும். உள்நாட்டு விசாரணையில் எந்த நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை 1990 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டு இதுவரை எதுவும் கிடைக்கவில்லை. இதனை சர்வதேச விசாரணைக்கு கொண்டு சென்று விசாரணை செய்ய வேண்டும்.


அதே நேரத்தில் அந்த முகாம் அமைந்திருந்த இடத்தில் அகழ்வுப் பணியினை முன்னெடுத்தால்  ஏராளமான  எலும்புக்கூடுகள் எடுக்கலாம் . குறித்த சம்பவத்தில் எனது குடும்பத்தில்  அம்மா, அப்பா, தம்பி, தங்கை, அக்காவின் 3  பிள்ளைகள் அம்மம்மா, என  10 பேர் படுகொலைசெயய்யப்பட்டுள்ளனர். இதனை சர்வதேசம் விசாரணை செய்ய வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக கேட்டுக் கொள்கின்றோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினரும் மற்றும் சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு உறுப்பினருமான தயாளகுமார் கௌரி,


”  நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து   செம்மணி மனித  புதைகுழிகளில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிழக்கு மாகாணத்தில் பல கூட்டு படுகொலைகள்  இடம்பெற்றுள்ளன.  அதில் குறிப்பாக சத்துருக்கொண்டான் படுகொலையானது 1990 ஆம் ஆண்டு ஒன்பதாம் திகதி ஒன்பதாம் மாதம் நடைபெற்றது  இந்த படுகொலை நடந்த பொழுது எனக்கு நான்கு வயது.
 186 பேர் சத்துருகொண்டான் இராணுவ முகாமில் படுகொலை செய்யப்பட்டதாக  இங்கு வாழ்ந்தவர்கள் கூறுவதைக் கேட்டு வளர்ந்தவள் நான்.
 09.09 1990. சத்துருக்கொண்டான் பிள்ளையாரடி பணிச்சையடி கொக்குவில் ஆகிய நான்கு கிராமங்களில்  ஒன்று கூடல் என்ற பெயரில் எமது உறவுகள் இராணுவ முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு  மிகவும் மோசமான முறையில்  சிறுவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், வயோதிபர்கள் ,இளைஞர்கள் ,பெண்கள் அனைவரும்  படுகொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பான சாட்சியங்கள்வெளிக்கொணரப்பட்டபோதும் இன்று வரை அந்த சம்பவம் எந்தவித நீதியும் கிடைக்கப் பெறவில்லை.
அதேபோல எனது அப்பா அம்மா இந்த நகர்ப்புறங்களில் இருக்கக்கூடிய முகாம்களுக்கு அழைத்துச் சென்று வந்த பின்பு தான் இந்த சம்பவம் நடந்தது குறிப்பாக எனக்கு நான்கு வயது என்னுடன் பக்கத்து வீட்டில் விளையாடிய சிறு பிள்ளைகள் படுகொலை செய்யப்பட்டனர்.

அதேபோல நானும் அங்கு சிறிது நேரம் இருந்திருந்தால் நானும் படுகொலை செய்யப்பட்டிருப்பேன். அதில் நானும் ஒரு நபராக தான் இருந்திருப்பேன்.
இன்று வரை நான் இருக்கின்றேன் என்றால் இந்த நீதிக்கான வழிமுறை  செய்யப்பட்டு சர்வதேச விசாரணைக்கு செல்ல வேண்டும் அழிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.


இனியும் தாமதம் இல்லாமல் இதற்கான தற்போதைய ஆட்சியில் இருக்கும் இந்த ஜனாதிபதி செம்மணி படுகொலை தோண்டப்படுவது போல் இந்த சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பாகவும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டால் அங்கு எங்களுடைய  எமது உறவுகளின் அடையாளங்கள் தோண்டி எடுக்கப்படும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.


ஆகவே இதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சூத்திரதாரிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதனை நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்” இவ்வாறுதயாளகுமார் கௌரி, தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை