மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இரண்டு பிரதேசங்களைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி சங்கத்தினர்களுக்கிடையில் நீண்டகாலமாக ஏற்பட்டு வந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச தவிசாளர் மே.வினோராஜ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி நகர்ப் பகுதியை மையமாக வைத்தே இரண்டு பிரதேசங்களைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதிகள் தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் போரதீவுப்பற்று மற்றும் மண்முனை தென் எருவில் பற்று ஆகிய இரு பிரிவுகளிலுமுள்ள முச்சக்கரவண்டி சாரதிகளுக்கிடையில் தத்தமது முச்சக்கரவண்டிகளை தரித்து நின்று பிரயாணிகளை ஏற்றிக் கொண்டு செல்வதில் பாரிய பிரச்சினைகைள மீக நீண்டகாலமாக எதிர் கொண்டு வந்தனர்.
இதனால் இரு பிரதேசங்களையும் சேரந்த முச்சக்கரவண்டி சாரதிகளுக்கிடையில் கருத்து வேறுபாடுகளும், வாக்குவாதங்களும், இருந்து வந்துள்ளன.
இந்த விடயம் குறித்து இரு பிரதேச முச்சக்கரவண்டி சாரதிகளும் இரு பிரதேசங்களிலுமுள்ள பிரதேச சபைகளின் நிர்வாகத்திற்கு தத்தமது முறைப்பாடுகளை முன்வைத்திருந்தனர்.
இந்தநிலையில் (15.09.2025) களுதாவளையில் அமைந்துள்ள மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் களுவாஞ்சிகுடி, மற்றும் போரதீவுப் பற்று பிரதேச முச்சக்கரவண்டி சாரதிகள், போரதீவுப் பற்ற பிரதேச சபை உபதவிசாளர், மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாடியுள்ளனர்.
பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இப்பிரச்சனைக்கு சுமுகமான தீர்வை எட்டியுள்ளதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைத் தவிசாளர் மே.வினோராஜ், மற்றும் போரதீவுப் பற்ற பிரதேச சபை உபதவிசாளர் கயசீலன், களுவாஞ்சிகுடி முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத் தலைவர் குவிந்தன், போரதீவுப் பற்று பிரதேச முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத் தலைவர் கோகுல்ராஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மிக நீண்ட காலமாக பெரும் இழுபறிக்கு மத்தியில் இருந்து வந்த தமது பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு பெறப்பட்டுள்ளமைக்கு முன்நின்று செயற்பட்ட போரதீவுப்பற்று மற்றும் மண்முனை தென் எருவில் பற்று ஆகிய இரு பிரதேச சபை தவிசாளர்களுக்குத் தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக முச்சக்கரவண்டி சாரதிகள் தெரிவித்தனர்.