மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு திறந்து வைப்பு.!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய இருதய சிகிச்சை பிரிவினை சுகாதார அமைச்சர் மக்கள் பாவனைக்கு கையளித்தார்.

ரூ.324 மில்லியன் செலவில் கட்டப்பட்ட இப்புதிய இருதய சிகிச்சை பிரிவின் முதல் கட்ட திறப்பு விழா இன்று (18.09.2025) இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, பாராளுமன்ற உறுப்பினர் க. பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய இருதயவியல் பிரிவு கட்டிடமானது 05 தளங்களைக் கொண்டுள்ளது. மொத்தம் 4,328 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கட்டிடத்தின் தரைத் தளத்தில் எக்ஸ்-ரே மற்றும் ஈசிஜி சோதனை அலகுகள், முதல் தளத்தில் கேத் லேப் மற்றும் கரோனரி கேர் யூனிட் (CCU), இரண்டாவது மாடியில் அறுவை சிகிச்சை அறைகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு (SICU), மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களில் 80 படுக்கைகள் கொண்ட வார்டுகள் உள்ளன.
இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர், மட்டக்களப்பு வைத்தியசாலையில் நவீனமயப்படுத்தப்பட்ட இருதய சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளதாகவும், மூன்று மாதங்களில் MRI பிரிவு அமைத்து தரப்படவுள்ளதாகவும், மேலும் புதிய கட்டிடத் தொகுதி மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு தேவையான நிதி பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

நிகழ்வில் வைத்தியசாலை பணிப்பாளர் கலாநிதி கலாரஞ்சனி கணேசலிங்கம், வைத்திய நிபுணர்கள், துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதியது பழையவை