வாழைச்சேனை துறைமுத்திலிருந்து சென்ற இயந்திரப் படகு கடலில் மூழ்கியது.!


மட்டக்களப்பு வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 273 MDR இலக்கமுடைய இயந்திரப் படகொன்று சனிக்கிழமை நேற்று(11.10.2025) கடலில் மூழ்கியுள்ளது.

வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து ஏழு நாட்களுக்கு முன்னர் மூன்று மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக இயந்திரப் படகில் ஆழ் கடலுக்குச் சென்றுள்ளனர்.

மூவரும் மீன்களைப் பிடித்துவிட்டு வலைகளை படகில் ஏற்றும் போது பாரிய அலையில் சிக்குண்டு படகு கடலில் மூழ்கியுள்ளது.

குறித்த கடற்பரப்பில் மற்றுமொரு படகில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவர்கள் கவிழ்ந்த படகிலிருந்த மூன்று மீனவர்களையும் பாதுகாப்பாக மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இந்த படகு விபத்துச் சம்பவம் வாழைச்சேனை துறைமுத்திலிருந்து சுமார் 103 கிலோ மீற்றர் தொலைவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாழைச்சேனையைச் சேர்ந்த படகு உரிமையாளர் அல்ஹாஜ் எம்.எச்.அலீம் என்பவர் படகு விபத்துச் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், துறைமுக அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை