மட்டக்களப்பில் ஊடகவியலாளர் சுகிர்தராஜன் நினைவேந்தல் நிகழ்வு.!

திருகோணமலையில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்ரமணியம் சுகிர்தராஜனின் 20வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(24.01.2026) காலை மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் அமைந்துள்ள படுகொ*லை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத் தூபியில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு ஊடக அமையம் மற்றும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா. கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் உட்பட மாவட்டத்தைச் சேர்ந்த பல ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது, அமரர் சுகிர்தராஜனின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், வருகை தந்த அனைவராலும் மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
2006 ஆம் ஆண்டு உயர்தரக் கல்வியை நிறைவு செய்த பின்னர் பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருந்த ஐந்து மாணவர்கள் திருகோணமலை கடற்கரையில் சுட்டுக் கொல்*லப்பட்ட சம்பவம் தொடர்பில், சுகிர்தராஜன் நிழற்படங்கள் எடுத்து செய்தி வெளியிட்டிருந்தார்.

மாணவர்களின் உயிரிழப்பிற்கு கைக்குண்டுத் தாக்குதலே காரணம் என விசாரணைகளை திசைதிருப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், சுகிர்தராஜன் எடுத்த நிழற்படங்கள் மாணவர்கள் தலையில் சுடப்பட்டு உயிரிழந்ததை தெளிவாக வெளிப்படுத்தியிருந்தன. இதன் காரணமாக சர்வதேச ரீதியில் பல்வேறு அழுத்தங்கள் உருவாகியமை குறிப்பிடத்தக்கது.


யுத்த சூழலிலும் துணிச்சலுடன் ஊடகப் பணியாற்றிய சுகிர்தராஜன், 2006 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

மட்டக்களப்பு குருமண்வெளியை பிறப்பிடமாகக் கொண்ட சுகிர்தராஜன், அம்பாறை வீரமுனையில் வசித்து வந்த நிலையில், திருகோணமலையில் பணி நிமித்தமாக தங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை