​மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் 'புதிர் வழங்கும்' நிகழ்வு வெகுவிமர்சையாக நடைபெற்றது!



வரலாற்றுப் புகழ்பெற்ற மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் வருடாந்தம் நடைபெறும் பாரம்பரிய "புதிர் வழங்கும்" நிகழ்வு இன்று (22.02.2026) ஆம் திகதி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தின் பாரம்பரிய வழக்கப்படி, அறுவடைக்காலத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த புனித நிகழ்வில் கலந்துகொள்வதற்காக மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இன்று காலை முதலே ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.
ஆண்டுதோறும் பெரும்போக நெல் அறுவடை நிறைவடைந்ததும், ஆலயத்திற்குச் சொந்தமான நெற்காணிகளில் விளையும் நெல்லையும், விவசாயிகள் தமது நேர்த்திக்காக வழங்கும் நெல்லையும் கொண்டு இந்த 'புதிர்' தயார் செய்யப்படுகிறது.

​விவசாயிகளால் வழங்கப்பட்ட நெல் மற்றும் ஆலய நெல் ஆகியவற்றை ஆலய நிருவாகத்தினர் நேர்த்தியாக பொதி செய்து, விசேட பூஜைகளின் பின்னர் பக்தர்களுக்கு வழங்கினர்.

​இந்த "புதிர் நெல்லை" பெற்றுச் சென்று தமது இல்லங்களில் அல்லது நெற்களஞ்சியங்களில் வைப்பதன் மூலம், அந்த ஆண்டு முழுவதும் தட்டுப்பாடின்றி உணவும் செல்வமும் பெருகும் என்பது இப்பகுதி மக்களின் ஆழமான நம்பிக்கையாகும்.

​விவசாயப் பண்பாட்டையும் ஆன்மீகத்தையும் இணைக்கும் இந்த நிகழ்வானது, மட்டக்களப்பு மண்ணின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அமைந்திருந்தது.
புதியது பழையவை