தேசத்தின் காந்தக் குரல் -மாமனிதர் சாந்தன் அவர்களின் நினைவு நாளில் ஒரு சிறப்புப் பார்வை..!

​ஈழத்தமிழர் இதயங்களில் தனது காந்தக் குரலால் நீங்கா இடம் பிடித்த மாமனிதர் சாந்தன் அவர்களின் நினைவு நாளில், அவரது கலைப்பயணம் மற்றும் தேசப்பற்று குறித்த நினைவுகள் மீளவும் பகிரப்பட்டு வருகின்றன.

​ஆரம்பகாலப் பயணம்:-

செக்கடித் தெரு முதல் வானொலி வரை
​1972 ஆம் ஆண்டு கொழும்பு, செக்கடித் தெரு கதிரேசன் கோவிலில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், எதிர்பாராத விதமாகப் பாடக் கிடைத்த வாய்ப்பே சாந்தன் அவர்களின் கலைப்பயணத்திற்கு அத்திவாரமிட்டது. 

அன்று அவர் பாடிய 'மருதமலை மாமணியே முருகையா' பாடல், அங்கிருந்த ரசிகர்களைக் கட்டிப்போட்டது.
​இதனைத் தொடர்ந்து, அமரர் முகத்தார் வீடு ஜேசுரட்ணம் அவர்களின் வழிகாட்டலில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 'சிறுவர் மலர்' நிகழ்ச்சியில் அறிமுகமானார். 

அங்கிருந்து வானொலி நாடகங்கள், மேடை இசை எனத் தனது ஆளுமையை விரிவுபடுத்தினார்.

​தாயகக் கலைஞனாக விஸ்வரூபம்
​1977 இல் கிளிநொச்சிக்குக் குடிபெயர்ந்த அவர், 1981 இல் 'கண்ணன் இசைக்குழுவில்' இணைந்தார். பின்னர் 1982 இல் 'சாந்தன் இசைக்குழு' என்ற பெயரில் சொந்தமாக இசைக்குழுவைத் தொடங்கி மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

​தாயக விடுதலைப் போராட்டம் உச்சம் பெற்ற காலத்தில், தாயகக் கலைப்பண்பாட்டுக் கழகத்தின் முதன்மைப் பாடகராகத் திகழ்ந்தார். 1989 இல் வெளியான 'வானம் பூமியானது' அவரது முதல் பாடலாக அமைந்தது. 

அதனைத் தொடர்ந்து:-

​அடங்கிக் கிடந்த தமிழன்
​ஆனையிறவின் மேனி தடவி
​ஆழக் கடலெங்கும் போன்ற நூற்றுக்கணக்கான பாடல்கள் போர்க்களத்திலும், மக்களின் இல்லங்களிலும் வீரத்தையும் எழுச்சியையும் விதைத்தன.

​தியாகத்தால் உயர்ந்த தந்தை
​சாந்தன் அவர்கள் ஒரு கலைஞனாக மட்டுமன்றி, தனது பிள்ளைகளையும் தேசத்திற்காக அர்ப்பணித்த ஒரு தியாகச் செம்மலாகவும் மதிக்கப்படுகிறார்.

​அவரது மூத்த மகன் இரண்டாம் லெப்டினன்ட் கானகன் (மோகன்ராஜ்) 1998 இல் ஜெயசிக்குறு முறியடிப்புச் சமரில் வீரச்சாவடைந்தார்.

​இரண்டாவது மகன் மேஜர் இசையரசன் (பிரபுராஜ்) 2009 இல் கடற்படையின் டோறா கடற்கலத்தை மூழ்கடித்து கடற்கரும்புலியாகத் தன்னை ஆகுதி ஆக்கிக் கொண்டார்.

​தொடரும் கலைப் பாரம்பரியம்
​தற்போது அவரது மகன் கோகுலன் ஒரு சிறந்த பாடகராகத் தந்தையின் வழியில் பயணித்து வருகிறார். தந்தையின் நினைவாக அவர் நடாத்தும் 'தேசம் சுமந்த பாடல்' போட்டியின் இறுதிச் சுற்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

​"சாந்தன் அவர்களின் குரல் என்பது ஒரு காலத்தின் சாட்சி. அந்தக் குரல் ஈழத் தமிழரின் வரலாற்றோடு என்றும் பின்னிப் பிணைந்திருக்கும்."
புதியது பழையவை