மட்டக்களப்பு - கொக்கடிச்சோலை பிரதேசத்தில் கணவரால் தீ வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மனைவி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று(24.03.2026) இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொக்கட்டிச்சோலை முனைக்காடு, நாகதம்பிரான் கோவில் வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய மயில்வாகனம் இம்பமலர்தேவி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த ஜனவரி 17ஆம் திகதி குறித்த பெண் கணவரால், உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததில் அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரது கணவர் கைது செய்யப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி நீதிமன்ற முன்னிலைப்படுத்திய போது அவரை எதிர்வரும் ஏப்ரல் 26 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, படுகாயமடைந்த பெண் 10 நாட்கள் வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், வீடு திரும்பிய பின்னர் சம்பவ தினமான இன்று காலையில் வீட்டில் உயிரிழந்துள்ளார்.
அவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.