கிழக்கு மாகாணத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற மட்டக்களப்பு, திருப்பழுகாமம் அருள்மிகு ஸ்ரீ கௌரிஅம்பிகா சமேத கேதீஸ்வரர் (சிவன்) ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழா (23.03.2026) திங்கட்கிழமை காலை பக்திபூர்வமாக ஆரம்பமானது.
இன்று காலை 10.00 மணியளவில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ தெ.கு.ஜனேந்திரராசா குருக்கள் தலைமையில் விசேட பூசைகள் இடம்பெற்று, வேத பாராயணங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க ஆலயத்தின் திருக்கொடி ஏற்றப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறவுள்ள இந்த மஹோற்சவத்தில், தினமும் விசேட பூசைகள் மற்றும் வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.
தினசரி அதிகாலை 5.00 மணிக்கு அபிஷேக ஆராதனைகளுடன் ஆரம்பமாகும்.
மாலை 6.00 மணிக்கு பஜனையுடன் ஆரம்பமாகி, தம்ப பூஜை மற்றும் இரவு 8.00 மணிக்கு வசந்த மண்டப பூசையைத் தொடர்ந்து சுவாமி உள்வீதி, வெளிவீதி உலா என்பன சிறப்பாக நடைபெறும்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி (01.04.2026) புதன்கிழமை அன்று சமுத்திர தீர்த்தோற்சவத்துடன் இந்த வருடாந்த மஹோற்சவ பெருவிழா இனிதே நிறைவுபெறவுள்ளது.
திருப்பழுகாமம் மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கும் இந்தத் திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ளனர்.