தமிழர் பகுதியில் கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.!

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில், இன்று (19.03.2026) அதிகாலை இடம்பெற்ற தொடர்ச்சியான கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே இரவில் மூன்று வீடுகளை இலக்காகக் கொண்டு இடம்பெற்ற இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்றையதினம் அதிகாலை சுமார் 2.30 மணியளவில், குறித்த பகுதியில் உள்ள மூன்று வீடுகளின் ஜன்னல் கம்பிகளை அகற்றி உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

முதல் வீட்டில் சுமார் 10 பவுன் தங்க நகைகளும், இரண்டாம் வீட்டில் 70,000 ரூபாய் ரொக்கமும், மூன்றாம் வீட்டில் 5 குவைத் தினார் மற்றும் 30 இந்திய ரூபாய் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களும் கொள்ளையர்களினால் கொள்ளையிடப்பட்டுள்ளன.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த தம்பலகாமம் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.

விசாரணைகளின் போது பயன்படுத்தப்பட்ட பொலிஸ் மோப்ப நாய், கொள்ளை நடைபெற்ற வீடுகளிலிருந்து புறப்பட்டு, சந்தேகநபர்கள் தங்கியிருந்ததாகக் கருதப்படும் ஒரு வீட்டிற்குள் இரண்டு முறை சென்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, குறித்த வீட்டில் இருந்த நால்வரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் இருவர் கிண்ணியா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், மற்றைய இருவர் முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது .

தற்போது கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் திருடப்பட்ட நகைகள் மற்றும் பணத்தை மீட்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


அத்துடன் கைரேகை அடையாள நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மேலதிக தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
புதியது பழையவை