இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மார்ச் மாதத்தில் மூன்றாவது முறையாக எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ள நிலையில், புதிய விலைகளுக்கு இணங்க QR குறியீட்டின் கீழ் வாராந்த ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு வாகன உரிமையாளர்கள் செலவிட வேண்டிய தொகை தொடர்பான புதிய விபரங்கள் கணக்கிடப்பட்டுள்ளது.
அமுலுக்கு வந்துள்ள இந்த மாற்றத்தின்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் லீற்றர் 398 ரூபாயாகவும், 95 ஒக்டேன் பெட்ரோல் 455 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல், ஒட்டோ டீசல் 382 ரூபாய்க்கும், சுப்பர் டீசல் 443 ரூபாய்க்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி,உந்துருளிக்கான வாராந்த 8 லீற்றர் பெட்ரோல் ஒதுக்கீட்டைப் பெற 92 ஒக்டேன் பெட்ரோல் பயன்படுத்தும் ஒருவருக்கு 3,184 ரூபாவும், 95 ஒக்டென் பெட்ரோல் பயன்படுத்துபவருக்கு 3,640 ரூபாயும் செலவாகும்.
அத்துடன், முச்சக்கர வண்டிகளுக்கு வழங்கப்படும் 20 லீற்றர் ஒதுக்கீட்டுக்காக 92 ஒக்டேன் பெட்ரோல் பயன்படுத்துபவர் 7,960 ரூபாயும், 95 ஒக்டென் பயன்படுத்துபவர் 9,110 ரூபாயும் வாராந்தம் செலவிட வேண்டும்.
அதேபோல் டீசல் பயன்படுத்தும் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு ஒட்டோ டீசலுக்காக வாராந்தம் 7,640 ரூபாயும், சுப்பர் டீசலுக்காக 8,860 ரூபாயும் தேவைப்படும்.
மேலும், சிற்றுந்துகளை பொறுத்தவரையில், வாராந்த 25 லீற்றர் ஒதுக்கீட்டிற்கு 92 ஒக்டென் பெட்ரோலுக்கு 9,950 ரூபாயும், 95 ஒக்டெனுக்கு 11,375 ரூபாயும் செலவாகும். டீசல் சிற்றூந்துகளுக்கு ஒட்டோ டீசலுக்கு 9,550 ரூபாயும், சுப்பர் டீசலுக்கு 11,075 ரூபாயும் வாராந்தம் செலவிட வேண்டியேற்படும்.
மேலும், பேருந்துகளுககு ஒரு வாரத்திற்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டுக்காக சுமார் 38,200 ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மார்ச் மாத காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தொடர் திருத்தங்கள் மூலம், அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளும் சராசரியாக லீற்றருக்கு சுமார் 100 ரூபாய்க்கும் அதிகமான தொகையினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.